தமிழர் பண்பாட்டில், மொழியில்,
வரலாற்றில் இருந்து பிரிக்க
முடியாத அறிவர் பட்டினத்தார்.
தமிழ் இலக்கியங்களில் நான்
அதிகம்
படித்தது பக்தி இலக்கியங்கள் தான்.
அதிலும் அதிகமாக
படித்தது சித்தர் பாடல்கள்.
அவற்றுள் நான்
விரும்பி படித்தது பட்டினத்தார்
பாடல்கள் தான். கடவுள்
இருப்பு மறுப்பு என்பதை கடந்து
தமிழர்கள் யாவரும் படிக்க
வேண்டிய படைப்பு பட்டினத்தார்
பாடல்கள். தமிழின் அருஞ்சுவை,
தமிழர் பண்பாட்டின் சாரம், மனதின்
மாய விளையாட்டுகள்,
மெய்யறிவின் திறனாய்வு என
பன்முக கோணங்களில் பாடப்பெற்ற
பாடல்கள் தான் பட்டினத்தாரின்
ஒப்பற்ற படைப்புகள்.
எல்லாவற்றிக்கும் மேலாக
தாயை நேசிக்கும் எவரும் படிக்க
வேண்டியது, தாயை குறித்த
பட்டினத்தாரின் உணர்வுகள் மற்றும்
நெஞ்சை உள்ளிருந்து உருக்கும்
அவரது பாடல்கள்.
ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம்
நொந்து பெற்றுப்
பையலென்ற போதே பரிந்தெடுத்துச்
செய்ய இரு
கைப்புறத்தில் ஏந்திக்
கனகமுலை தந்தாளை
எப்பிறப்பில் காண்பேன் இனி.
முந்தித் தவம்
கிடந்து முன்னூறு நாள்சுமந்தே
அந்திபகலாய்ச் சிவனை ஆதரித்துத்
தொந்தி
சரியச் சுமந்து பெற்ற தாயார் தமக்கோ
எரியத் தழல் மூட்டுவேன்
போன்ற பாடல்கள் நெகிழ்ச்சியின்
உச்சகட்டம். மனிதன் கருவில்
உருவாதல் முதல் பாடையில்
சென்று முடிவில் சாம்பல் ஆகும்
வரை வாழ்க்கையை அங்குல
அங்குலமாக அளந்து பாடிய பாடல்
வரிகள் நிச்சயம்
படிப்பவரை மெய்சிலிர்க்க
வைக்கும். சிந்திக்கத் தூண்டும்.
ஒரு கணப் பொழுதில்
தனக்கு அறிவை ஊட்டி மறைந்த
தனது புதல்வனின்
இதயத்தை தைக்கும் வார்த்தைகள்.
'காதற்ற ஊசியும் வாராது காணும்
கடை வழிக்கே' என்னும் வரிகள்
தமிழர்களின்
ஈடு இணையில்லா மெய்யியல்
வாசகம்.
பகட்டான ஆரியப் பண்பாட்டினை,
சடங்குகளை, நூல்களை சாடாமல்
இல்லை பட்டினத்தார்.
தமிழர்களுக்கே உரிய அரிய சித்தர்
ரகசியங்களை இவர் பாடல்கள்
உள்ளடக்கி உள்ளது.
சாதி மதம் கடந்து தமிழர்
மெய்யியல் விரும்பும் ஆர்வலர்கள்
அனைவரும் படிக்க வேண்டிய நூல்
பட்டினத்தார் பாடல்கள். இன்றும்
தமிழர்கள் இறந்தால், சுடுகாட்டில்
இறுதி சடங்கு செய்பவர் பாடும்
பாடல்கள் பட்டினத்தார் பாடல்கள்
தான். ஒவ்வொரு ஊருக்கும் உள்ள
சிறப்பியல்புகளை விளக்கும்
பாடல்கள். உடுக்க ஒரு உடைக்
கோவணத்தோடு தமிழர்
நிலப்பரப்பு முற்றிலும் தன் காலால்
நடந்தே அளந்து முடித்து ஓய்ந்து
முடிவில்
திருவொற்றியூருக்கு வந்து நிலை
கொண்டார் பட்டினத்து அடிகள்.
அவர் இறுதியில் அடக்கமான இடம்
இன்றும் அங்கு இருக்கிறது. பல
முறை அங்கு சென்று பட்டினத்தாரை
நினைவு கூர்ந்துள்ளேன்.
அவரது பாடல்கள் என்றும்
நினைவில் விட்டு நீங்காதவை.
தமிழும், தமிழர் பண்பாடும்
இவ்வுலகில் வாழும்
வரை பட்டினத்தாரும்
இணைந்தே வாழ்வார். தமிழர்
பண்பாட்டில், மொழியில்,
வரலாற்றில் இருந்து பிரிக்க
முடியாத ஒரு மாமனிதர்
பட்டினத்தார்.
யாருக்கும் அடங்காத வீரம்,
மண்டியிடாத மானம், சமரசம்
இல்லா அறிவு போன்ற
பண்புகளை தன்னகத்தே கொண்ட
கருணையின் ஊற்றாக விளங்கிய
பட்டினத்தாரை பற்றி ஒவ்வொரு
தமிழனும் நிச்சயம் அறிந்திருக்க
வேண்டும்.
Saturday, 16 November 2013
தமிழர் பண்பாட்டில், மொழியில், வரலாற்றில் இருந்து பிரிக்க முடியாத அறிவர் பட்டினத்தார்
Labels:
தமிழ்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment