Thursday, 7 November 2013

தாய்மொழி வழிக் கல்வி என்பதே கூட ஒரு அறிவியல் கண்ணோட்டம்தான்.!

மனித சமுதாய வளர்ச்சியின்
அடிப்படையே, தெரியாத
உண்மைகளைத் தெரிந்துகொள்ளும்
முனைப்புதான். ஆதிமனிதர்கள்
இயற்கையின் ரகசியங்களைக்
கண்டறிந்து அடுத்த
தலைமுறைக்கு வழங்கினார்கள்.
நமது முன்னோர்களது
கண்டுபிடிப்புகளின்
பலன்களை நாம்
அனுபவித்துக்கொண்டிருக்கிறோம்.
அடுத்த தலைமுறைக்கு நமது
கண்டுபிடிப்புகளின் பலன்களைத்
தருவது நமது கடமை. இந்தத்
தொடர்ச்சி அறுந்துவிடக்கூடாது.
நமது நாட்டில் மதங்களும்
சாதிகளும் பகுத்தறிவுக்குப்
பொருந்தாத நம்பிக்கைகளும் மனித
முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை
போட்டு, அவ்வப்போது அந்தத்
தொடர்ச்சியை அறுத்துவிட்டுள்ளன.
நாட்டில் வறுமையும் பிணியும்
கல்லாமையும் தொடர்கிற
நிலையில், 450 கோடி ரூபாயில்
செவ்வாய்க் கோள்
ஆராய்ச்சி தேவைதானா என்ற
கேள்வி முன்வைக்கப்படுகிறது.
இப்படிப்பட்ட ஏற்றத்தாழ்வுகள் நம்
நாட்டில் எல்லாத் துறைகளிலும்
இருக்கின்றன. விளையாட்டுத்
துறையை எடுத்துக்கொண்டால்
கிரிக்கெட்டுக்குத் தரப்படுகிற
முக்கியத்துவம் நமது பாரம்பரிய
விளையாட்டுகளுக்குக் கூட
அளிக்கப்படுவதில்லை. அந்த
விளையாட்டுகளுக்கு சமமான
முக்கியத்துவம் அளியுங்கள்
என்றுதான் வலியுறுத்த
வேண்டுமே தவிர, நம் மக்களின்
வாழ்வோடு கலந்துவிட்ட
கிரிக்கெட்டை நிராகரித்துவிட
முடியாது. அதுபோல்
வறுமை ஒழிப்பு, பொதுக் கல்வி,
பொது மருத்துவம்
ஆகியவற்றுக்கு முழுமையான
முக்கியத்துவம் அளிக்க
வலியுறுத்திப் போராட
வேண்டுமேயன்றி அறிவியல்
ஆராய்ச்சி தேவையில்லை என்ற
முடிவுக்குப் போய்விடக் கூடாது.
சொல்லப்போனால் அறிவியல்
ஆராய்ச்சிகளுக்காக மிகவும்
குறைவாகச் செலவிடும்
நாடு இந்தியா.
‘பிரிக்ஸ்’ (பிரேசில், ரஷ்யா,
இந்தியா, சீனா, தென் ஆப்பிரிக்கா)
அமைப்பில் உள்ள நாடுகளில்
அறிவியல் ஆராய்ச்சிகளுக்காகச்
செலவிடுவதில்
கடைசி இடத்தில்தான்
இந்தியா இருக்கிறது. மொத்த
உள்நாட்டு உற்பத்தியில் 0.9 சதவீத
நிதிதான் அறிவியலுக்காக
ஒதுக்கப்படுகிறது. 2
சதவீதமாகவாவது அதை உயர்த்த
வேண்டும் என்ற அறிவியலாளர்கள்
கோரிக்கை
கண்டுகொள்ளப்படவில்லை.
கல்விக்கு 6 சதவீதம் ஒதுக்க
வேண்டும் என்ற நியாயமான
ஆலோசனை புறக்கணிக்கப்படுவது
போலத்தான்.
இந்தியாவின் பல வல்லுநர்கள்
அமெரிக்காவின் ‘நாசா’ போன்ற
நிறுவனங்களுக்குச்
சென்றிருப்பது வேலைவாய்ப்பு,
நல்ல ஊதியம் என்பதற்காக
மட்டுமல்ல. தாங்கள் கற்றறிந்த
அறிவியலை இங்கே
ஆராய்ச்சிகளுக்குப் பயன்படுத்த
முடியவில்லையே என்ற
ஆதங்கத்தாலும்தான்.
மக்களின் வறுமைக்குக் காரணம்
அறிவியல் ஆராய்ச்சிக்காக
இத்தனை கோடி ஒதுக்குவதல்ல.
விவசாய வளர்ச்சி, உள்நாட்டுத்
தொழில் வளர்ச்சி,
கல்வி மேம்பாடு போன்றவற்றிற்கு
வழிவகுக்காத அரசின்
பெருமுதலாளித்துவ ஆதரவுக்
கொள்கைகளே காரணம். அந்தக்
கொள்கைகளை எதிர்த்துப்
போராட்டங்கள் நடக்கின்றன. அந்தப்
போராட்டங்களில் பெருந்திரளாகப்
பங்கேற்று அவற்றை வெற்றிபெறச்
செய்வதே மாற்றுக் கொள்கைகள்
காலூன்றுவதற்குக் களம் அமைக்கும்.
‘மங்கள்யான்’ திட்டத்தால்
நாட்டிற்கு எவ்வளவு வருமானம்
கிடைத்துவிடப்போகிறது என்றும்
கேட்கிறார்கள்.
இவ்வளவு முதலீடு செய்தேன்,
இவ்வளவு லாபம்
கிடைத்தது என்று பார்க்கிற
வியாபார விசயம் அல்ல இது. மற்ற
நாடுகளின் செயற்கைக் கோள்களைக்
கட்டண அடிப்படையில் விண்ணில்
செலுத்துகிற ஒரு வர்த்தகத்
திட்டமும் அல்ல. இப்படிப்பட்ட
விண்வெளி ஆராய்ச்சிகளால்
நேரடி பலன் என்று உடனடியாகக்
கிடைத்துவிடாதுதான். ஆனால்
ஆராய்ச்சிக்காக உருவாக்கப்படும் பல
புதிய தொழில்நுட்பங்கள்
நடைமுறை வாழ்க்கைக்கு
வருகிறபோது மக்களுக்குப்
பெரிதும் பலனளிக்கின்றன.
செவ்வாய்ப் பயணம் தேவையா என்ற
விவாதங்களையே கூட மக்கள்
தொலைக்காட்சிகளில்
நேரடி ஒளிபரப்பாகப்
பார்த்துக்கொண்டிருக்கிறார்களே,
அது விண்வெளி ஆராய்ச்சியால்
கிடைத்த தொழில்நுட்பம் அல்லவா?
செல்போன், பெர்சனல் கம்ப்யூட்டர்
இரண்டும் இல்லாத
உலகத்தை இன்று கற்பனை செய்தாவது
பார்க்க முடியுமா?
இவை விண்வெளி ஆராய்ச்சி
வாகனங்களில்
பயன்படுத்துவதற்காகக்
கண்டுபிடிக்கப்பட்ட
தொழில்நுட்பங்களிலிருந்து
கிடைத்தவைதான். எளிதில்
கணக்குப் போடுவதற்கான
கால்குலேட்டர், காலணிகளுக்குக்
கூட பயன்படும் வெல்க்ரோ,
வலியற்ற அறுவைக்குப் பயன்படும்
லேசர் சர்ஜரி, சர்வசாதாரணமாகப்
புழக்கத்துக்கு வந்துவிட்ட
டிஜிட்டல் கடிகாரம், உடலின்
உட்பகுதிகளில் உள்ள
குறைபாடுகளைக்
கண்டுபிடித்திடும் இன்ஃப்ரா ரெட்
கேமரா, இதய சிகிச்சையில் முக்கிய
வளர்ச்சியாக வந்துள்ள பேஸ் மேக்கர்
பேட்டரி, கதிர் வீச்சுத் தடுப்புக்
கண்ணாடிகள், அல்ட்ரா சவுண்ட்
சிகிச்சை முறைகள்,
நோய்க்கிருமிகளற்ற தண்ணீர்
தயாரிப்பதற்கான சுத்திகரிப்புக்
கருவிகள்,
கார்களை இயக்குவதற்கான
நேவிகேசன் அமைப்பு,
எங்கே இருக்கிறோம் என்று அறிய
உதவும் செல்போன்
வழிகாட்டி என்று பல நன்மைகள்
கிடைத்திருக்கின்றன.
நாட்டிற்கு இன்று முக்கியமாகத்
தேவைப்படுகிற
மின்சாரத்தை சூரிய
சக்தியிலிருந்து பெறுவது குறித்து
இன்று பெரிதும் பேசப்படுகிறது.
அந்த சூரிய மின்சாரத்
தொழில்நுட்பமும்
செயற்கைக்கோள்களுக்கான மின்சார
ஏற்பாட்டிலிருந்து வந்ததுதான்.
இத்தகைய எண்ணற்ற பலன்கள்
பல்வேறு நாடுகளின்
விண்வெளி ஆராய்ச்சிகளால் உலக
மக்களுக்குக் கிடைத்துள்ளன.
செவ்வாய் ஆராய்ச்சியும்
இப்படிப்பட்ட
கண்டுபிடிப்புகளை எதிர்காலத்தில்
வழங்கக்கூடும். புயல்கள்
உருவாவதைக் கண்டறிவதில்
அடுத்த கட்டத்திற்குச் செல்ல இந்த
ஆராய்ச்சி வழிவகுக்கும்
என்று இத்திட்டத்தில்
பங்கெடுத்துள்ள வல்லுநர்கள்
சொல்கிறார்கள். அப்படிச்
செல்கிறபோது மோசமான
புயல்தாக்குதல்களிலிருந்து
மக்களைப் பெருமளவுக்குக் காக்க
முடியும். இதற்கான உலகளாவிய
ஆய்வுகளில் இந்தியாவின்
பங்களிப்பாக அது அமையும்.
உலகத்தின் ஒரு அங்கம்தான் நாம்.
உலகத்திலிருந்து நாம்
பெறுகிறோம், நாமும்
உலகத்திற்கு வழங்குவோம்.
இன்னொரு முக்கியமான பயன்
இருக்கிறது: செவ்வாய்
என்பது பூமியைப் போல கல்லும்
மண்ணும் உள்ள ஒரு செந்நிறக்
கோள்தான்,
அதற்கென்று இயற்கைக்கு அப்பாற்பட்ட
மகிமை எதுவும் கிடையாது என்ற
உண்மை உறுதிப்படும் அல்லவா?
செவ்வாய் தோஷம் என்பதன் பெயரால்
எத்தனை பெண்கள்
பாதிக்கப்பட்டிருக்கிறார்கள்.
தற்கெல்லாம் முடிவுகட்ட இந்த
ஆராய்ச்சியும் தன்
பங்கிற்கு உதவுமே!
நட்சத்திரங்களும் கோள்களும் மனித
வாழ்க்கையைத்
தீர்மானிப்பதில்லை என்ற
உண்மை பரவுமானால்
அது சமுதாயத்திற்கு எவ்வளவு
பெரிய நன்மை!
அறிவியல் என்பது வெறும்
பிப்பெட், பியூரட் மட்டுமல்ல.
இந்தியாவின்
அரசமைப்பு சாசனத்தில்,
மக்களிடையே அறிவியல்
மனப்போக்கை வளர்த்தல்
ஒரு லட்சியமாக
அறிவிக்கப்பட்டிருக்கிறது.
அரசமைப்பு சாசனத்தில்
சொல்லப்பட்டிருப்பதை
நிறைவேற்றுவது அரசின் கடமை.
பள்ளிகள், கல்லூரிகளில்
இயற்பியல், வேதியல் உள்ளிட்ட
அடிப்படை அறிவியல்
கல்வியை ஊக்குவிப்பது,
அறிவியல் இயக்கம் போன்ற
அமைப்புகள் தங்களது சொந்த
முயற்சியில் செய்கிற அறிவியல்
விழிப்புணர்வுத்
திட்டங்களை அரசாங்கமே
மேற்கொள்வது, அறிவியல்
திட்டங்களை முறைகேடுகள்
இல்லாமல் செயல்படுத்துவது,
ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவாக
உருவாக்குவது என்று பல
முனை நடவடிக்கைகள் தேவை.
அதேவேளையில் அருமையான
அறிவியல் திட்டங்களைத்
தொடங்குகிறபோது,
ஏதோவொரு கோவிலுக்குச்
சென்று கடவுள் சிலையின்
பாதத்தில் திட்டத்தின்
சிறு வடிவத்தை வைத்துப்
பூசை செய்கிற அபத்தங்கள்
நிறுத்தப்பட வேண்டும்.
ஸ்ரீஹரிகோட்டா போல தமிழகத்தின்
குலசேகரபட்டினம் ஒரு பயனுள்ள
தளமாக உருவாக முடியும்
என்று அறிவியலாளர்கள்
கூறுகிறார்கள்.
கோள்களுக்கு செலுத்து வாகனத்தை
ஏவுகிற எரிபொருள்
செலவு அதனால் குறையும்
என்கிறார்கள். தளத்திற்குத்
தேவையான நிலம்
அரசாங்கத்திற்கே சொந்தமானதாக
இருந்தும் இந்த
ஆலோசனையை ஏனோ மத்திய
அரசு ஏற்காமலிருக்கிறது.
இதை ஏற்றுச் செயல்படுத்த முன்வர
வேண்டும்.
அறிவியல் கண்டுபிடிப்புத் திறன்
எப்போது வளரும்?
தாய்மொழி வழியாகக்
கல்வி வழங்கப்படும்போதுதான்
வளரும். அறிவியல்
கண்டுபிடிப்புகளில்
முன்னணியில் இருக்கும்
நாடுகளிலெல்லாம்
தாய்மொழியில்தான்
கல்வி வழங்கப்படுகிறது.
இங்கே ஆங்கிலத்தின் வழியாகப்
படித்துவிட்டு மொழிபெயர்த்து
மொழிபெயர்த்தே மூளையின்
கண்டுபிடிப்பு ஆற்றல்
பின்னுக்குத்
தள்ளப்பட்டு காப்பியடிக்கிற
வேலைதான் நடக்கிறது.
தொழில்நுட்ப வல்லுநர்கள்
புறப்படுகிறார்களே தவிர,
கண்டுபிடிப்பு அறிவியலாளர்கள்
மிகக்குறைவாகவே உருவாகிறார்கள்.
தாய்மொழி வழிக்
கல்வி என்பதே கூட ஒரு அறிவியல்
கண்ணோட்டம்தான். ஆங்கில வழிக்
கல்வியைத் திணிக்கும்
நடவடிக்கைகளைக்
கைவிட்டு தாய்மொழியே
பயிற்றுமொழி என்பதை மத்திய –
மாநில அரசுகள்
எல்லா மாநிலங்களிலும்
உறுதிப்படுத்தக்
கடமைப்பட்டிருக்கின்றன.
அறிவியல்
திட்டங்களை நிராகரிப்பதற்கு மாறாக
, இப்படிப்பட்ட
மாற்று அணுகுமுறைகளுக்கான
குரல்கள் வலுவாக ஒலிப்பதன்
மூலமே மக்களுக்கான அறிவியல்
ஓங்கிடும்.

No comments:

Post a Comment