Sunday, 29 December 2013

குலசேகரப்பட்டினத்தில் விண்வெளி கேந்திரம் ஏன் அமைக்க வேண்டும்?

குலசேகரப்பட்டினத்தில்
விண்வெளி கேந்திரம் ஏன் அமைக்க
வேண்டும்?

சென்னைக்கு வடக்கே ஸ்ரீஹரிகோட்டா
விண்வெளி கேந்திரத்திலிருந்து
இந்தியாவின் செயற்கைக்கோள்களும்
ஆளில்லா விண்கலங்களும்
செலுத்தப்பட்டு வருகின்றன.
இங்கு இரண்டு ராக்கெட்
செலுத்து மேடைகள் உள்ளன.
மூன்றாவது மேடை அமைக்கப்பட
உள்ளது. இதற்கிடையே வேறு ஓர்
இடத்தில் புதிதாக
ஒரு விண்வெளி கேந்திரம்
அமைக்கத் திட்டம்
உள்ளது.இப்புதிய
விண்வெளி கேந்திரத்தைத்
தமிழகத்தில்
தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள
குலசேகரப்பட்டினத்தில் அமைக்க
வேண்டும் என்று தமிழகத்திலுள்ள
பல தரப்பினர் மத்திய
அரசை வற்புறுத்தி வருகின்றனர்.

ராக்கெட்டுகளைச் செலுத்துவதற்கான
விண்வெளி கேந்திரத்தை அமைக்க
இரு முக்கிய தகுதிகள் இருக்க
வேண்டும்.
முதலாவதாக
அது கிழக்குக் கடற்கரை ஓரமாக
இருக்க வேண்டும்.
இரண்டாவதாக
அது கூடியவரை பூமியின்
நடுக்கோட்டுக்கு அருகே இருக்க
வேண்டும். குலசேகரப்பட்டினம் இந்த
இரு தகுதிகளையும்
பூர்த்தி செய்கிறது.
அது கடலோரமாக அமைந்துள்ளது.
அது 8
டிகிரி வடக்கு அட்சரேகையில்
அதாவது பூமியின்
நடுக்கோட்டுக்கு அருகே
அமைந்துள்ளது.

ஏன் கிழக்குக் கடற்கரை ஓரமாக
இருக்க வேண்டும்? பொதுவில்
பெரும்பாலான செயற்கைக்கோள்கள்
கிழக்கு திசை நோக்கித்தான்
செலுத்தப்படுகின்றன.
உயரே கிளம்பும் ராக்கெட்டில்
ஏதாவது கோளாறு ஏற்பட்டு அதன்
காரணமாக அது வெடிக்கக்கூடும்.
ராக்கெட்டின் பகுதிகள் கடலில்
விழுவதுதான் நல்லது.
வேறு சில சமயங்களில்
ஏதோ கோளாறு காரணமாக ராக்கெட்
திசை திரும்பி கரையை நோக்கி
அதாவது விண்வெளி கேந்திரத்தை
நோக்கிப் பாயலாம்.
விண்வெளி கேந்திர அதிகாரிகள்
ராக்கெட் கடல் பகுதிக்கு மேலாக
இருக்கும் போதே அதை நடுவானில்
அழிப்பர். இதற்கான
பொத்தானை அமுக்குவதற்கென்றே
தனி அதிகாரி இருப்பார்.
உதாரணமாக 2010 ஆம்
ஆண்டு டிசமபர் 25 ஆம்
தேதி ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து
உயரே செலுத்தப்பட்ட
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்
திசை மாறியபோது இவ்விதமாக
நடுவானில் அழிக்கப்பட்டது.

விண்வெளி கேந்திரத்தை
கூடியவரை பூமியின்
நடுக்கோட்டுக்கு அருகே அமைப்பது
வழக்கம். இப்படி அமைப்பதால்
ஆதாயம் உண்டு.
அதாவது பூமி தனது அச்சில்
சுழல்வதன் பலனாக
ராக்கெட்டுக்கு கூடுதல் வேகம்
கிடைக்கும் இது இலவசமாகக்
கிடைப்பதாகும்.
பூமியானது பம்பரம் போல
மேற்கிலிருந்து கிழக்கு திசை
நோக்கி சுழல்கிறது.
எனவே பூமிக்கு சுழற்சி வேகம்
உண்டு. பூமியின் நடுக்கோட்டுப்
பகுதியில் பூமியின்
சுற்றளவு 40,075 கிலோ மீட்டர்.
பூமி தனது அச்சில்
ஒரு முறை சுற்றி முடிப்பதற்கு 23.93
மணி நேரம் பிடிக்கிறது.
பூமியின் சுற்றளவை 23.93 ஆல்
வகுத்தால் பூமியின்
நடுக்கோட்டுப் பகுதியில்
பூமியின் சுழற்சி வேகம்
மணிக்கு 1674 கிலோ மீட்டர்.
ஆனால் பூமியின்
நடுக்கோட்டுக்கு மேலே செல்லச்
செல்ல, இந்த வேகம் குறையும்.
உதாரணமாக 20
டிகிரி வடக்கு அட்சரேகையில்,
சுழற்சி வேகம் மணிக்கு 1569
கிலோ மீட்டராகத்தான் இருக்கும்.
ஆகவே 20 டிகிரி அட்சரேகையில்
ஒரு விண்வெளி கேந்திரம்
இருந்தால்
அங்கிருந்து செலுத்தப்படுகிற
ராக்கெட்டுக்கு பூமியின்
சுழற்சியால் கிடைக்கிற இலவச
வேகம் மேலே சொன்ன அளவுக்குக்
குறைவாகத்தான் இருக்கும்.

உலகில்
செயற்கைக்கோள்கள், விண்கலங்கள்
ஆகியவற்றை செலுத்தும்
அமெரிக்கா, ரஷியா, ஐரோப்பிய
விண்வெளி அமைப்பு, இந்தியா,
சீனா முதலான நாடுகளை எடுத்துக்
கொண்டால் ரஷியாவின்
விண்வெளி கேந்திரங்கள் தவிர்க்க
முடியாத வகையில் உள்
நாட்டில்தான் உள்ளன.
சீனாவின் சில
விண்வெளி கேந்திரங்கள் உள்
நாட்டில் உள்ளன. தவிர
அவை பூமியின் நடுக்
கோட்டிலிருந்து வடக்கே மிகவும்
தள்ளி அமைந்துள்ளன.
ஐரோப்பிய விண்வெளி அமைப்பின்
விண்வெளி கேந்திரம்
பிரெஞ்சு குயானாவில்
அட்லாண்டிக் கடலின் கிழக்குக்
கரை ஓரமாக பூமியின்
நடுக்கோட்டுக்கு மிக அருகில் 5
டிகிரி வடக்கு அட்சரேகையில்
அமைந்துள்ளது.
அங்கிருந்து ராக்கெட்டை ஏவினால்
1662 கிலோ மீட்டர் வேகம்
கூடுதலாகக் கிடைக்கும்.
அமெரிக்காவின் கேப் கெனவரல்
விண்வெளி கேந்திரம் மிகவும்
தள்ளி 28
டிகிரி வடக்கு அட்சரேகையில்
உள்ளது.
அங்கிருந்து செலுத்தப்படும்
ராக்கெட்டுகளுக்கு கிடைக்கும்
இலவச வேகம் குறைவுதான்.
ஆகவே பூமியின் நடுக்கோட்டுப்
பகுதியிலிருந்து ராக்கெட்டைச்
செலுத்தினால் கூடுதல்
எடை கொண்ட செயற்கைக்கோள்களைச்
செலுத்த முடியும் என்பதால் ரஷிய,
அமெரிக்க தனியார் நிறுவனங்கள்
கூட்டு சேர்ந்து பசிபிக் கடலில்
மிதக்கும்
மேடையிலிருந்து ராக்கெட் மூலம்
செயற்கைக்கோள்களை செலுத்தி
வருகின்றன.

இந்தியாவின்
ஸ்ரீஹரிகோட்டா விண்வெளி
கேந்திரம் 13
டிகிரி வடக்கு அட்சரேகையில்
உள்ளது.
அங்கிருந்து செலுத்தப்படும்
ராக்கெட்டுக்கு பூமியின்
சுழற்சியால் கிடைக்கிற கூடுதல்
வேகம் 1625 கிலோ மீட்டர். ஆனால்
குலசேகரப்பட்டினத்தில்
விண்வெளி கேந்திரம்
அமைத்து அங்கிருந்து ராக்கெட்
செலுத்தினால் கிடைக்கிற கூடுதல்
வேகம் மணிக்கு 1651 கிலோ மீட்டர்.
ஆகவே குலசேகரப்பட்டினத்தில்
விண்வெளி கேந்திரம் அமைத்தால்
ஸ்ரீஹரிக்கோட்டாவிலிருந்து
வழக்கமாகச் செலுத்தப்படுகிற
அதே ராக்கெட்டில் குறைவான
எரிபொருளை நிரப்பினால் போதும்.
அந்த அளவில் ராக்கெட்டின்
முகப்பில் அதிக எடை கொண்ட
செயற்கைக்கோளை வைத்துச் செலுத்த
முடியும்.
குலசேகரப்பட்டினத்தில் மேலும்
ஒரு ஆதாயம் உள்ளது.
அதாவது ஸ்ரீஹரிகோட்டாவி
லிருந்து
பி.எஸ்.எல்.வி. ராக்கெட்டுகள்
மூலம் வடக்கு-தெற்காக
செலுத்தப்படுகின்ற துருவ
செயற்கைக்கோள்களை நேர் தெற்காக
செலுத்த முடிவதில்லை. அப்படிச்
செலுத்தினால்
அது இலங்கை மீது செல்வதாக
இருக்கும். இந்திய விண்வெளித்
துறையினர் இதைத் தவிர்க்க
விரும்புகின்றனர்.
ஆகவே ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து
ராக்கெட் கிளம்பியதும்
சிறிது தூரம் கிழக்கு நோக்கிச்
சென்று விட்டுப்
பிறகு தெற்கு நோக்கிச்
செல்கின்றது. இதனால் கூடுதல்
எரிபொருள் செலவாகிறது.
குலசேகரப்பட்டினத்திலிருந்து இந்த
துருவ செயற்கைக்கோள்களைச்
செலுத்தினால் இலங்கை மீது பறக்க
வேண்டிய
பிரச்சினையே இருக்காது.
செயற்கைக்கோள்களை நேர் தெற்காகச்
செலுத்த முடியும். இதனால்
எரிபொருள் செலவு மிச்சமாகும்.
இந்தியாவோ பல்வேறு பணிகளுக்காக
அடிக்கடி துருவ
செயற்கைக்கோள்களைச்
செலுத்தி வருகிறது. இந்த
வகை செயற்கைக்கோள்களை
நிரந்தரமாக
குலசேகரப்பட்டினத்திலிருந்து
செலுத்தலாம்.

டிவி ஒளிபரப்பு,
வானிலை தகவல்,
ரேடியோ ஒலிபரப்பு என
பல்வேறு பணிகளுக்காக பூமியின்
நடுக்கோட்டுக்கு மேலே சுமார் 36
ஆயிரம் கிலோ மீட்டர் உயரத்தில்
இந்தியா 13 செயற்கைக்கோள்களைப்
பெற்றுள்ளது. இவை அனைத்தும்
இந்தியாவைப் பார்த்தபடி உள்ளன.
பங்கு மார்க்கெட் வர்த்தகம், தனியார்
நிறுவனங்களின் தகவல் தொடர்பு,
மணியார்டர் அனுப்புதல் என
வேறு பல பணிகளையும்
இவை செய்து வருகின்றன.
இவை இல்லையேல்
நாடே ஸ்தம்பித்து விடும்.
எடை மிக்க இந்த
செயற்கைக்கோள்களை இந்தியா
தயாரித்தாலும் அனேகமாக
இவை அனைத்தும் ஐரோப்பிய
விண்வெளி அமைப்பின்
கூரூ விண்வெளிக்
கேந்திரத்திலிருந்து பிரெஞ்சு
ஏரியான் ராக்கெட் மூலம்
உயரே செலுத்தப்பட்டவை.
இந்த வகை செயற்கைக்கோள்களையும்
இந்திய மண்ணிலிருந்தே செலுத்த
ஜி.எஸ்.எல்.வி. ராக்கெட்
உருவாக்கப்பட்டு அவை
ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து
செலுத்தப்பட்டன. இந்த வகை ராக்கெட்
முழு வெற்றி பெற்றதாகச் சொல்ல
முடியாது.
அடுத்து ஜி.எஸ்.எல்.வி. மார்க் 3
என்ற அதிக சக்தி மிக்க ராக்கெட்
உருவாக்கப்படுகிறது. இதற்கென
ஸ்ரீஹரிகோட்டாவில் ராக்கெட் தளம்
உள்ளது.
இந்த வகை ராக்கெட்டுகளையும்
குலசேகரப்பட்டினத்திலிருந்தே
செலுத்த இயலும். தகவல்
தொடர்பு செயற்கைக்கோள்கள்
கிழக்கு நோக்கிச் செலுத்தப்படும்.
இவை பூமியின்
நடுக்கோட்டுக்கு நேர் மேலே இருக்க
வேண்டியவை. ஸ்ரீஹரிகோட்டா 13
டிகிரி வடக்கு அட்சரேகையில்
இருப்பதால் இவை குறிப்பிட்ட
கோணத்தில் திரும்பி அதன்
பிறகே பூமியின்
நடுக்கோட்டுக்கு
மேலே வந்து சேரும்.
ஆகவே இங்கு புதிய விண்வெளிக்
கேந்திரத்தை அமைத்து மேற்படி
ராக்கெட்டுகளைச் செலுத்தினால்
அவை திரும்ப வேண்டிய கோணம்
குறையும். இதன் மூலம் எரிபொருள்
செலவு குறையும். ஆகவே அதிக
எடை கொண்ட செயற்கைக்கோள்களைச்
செலுத்த முடியும்.
ஜி.எஸ்.எல்.வி.
வகை ராக்கெட்டுகளை
செலுத்துவதற்கென்றே
ஸ்ரீஹரிகோட்டாவில்
அனைத்து ஏற்பாடுகளையும்
செய்து விட்டு,
குலசேகரப்பட்டினத்திலும்
மறுபடி அதே வசதிகளைச்
செய்வது வீண் செலவாக
இருக்குமே என்று இஸ்ரோ கருதலாம்.
ஆனால் ஒன்று.
இந்தியா இந்த வகை ராக்கெட்டுகள்
மூலம் எடைமிக்க
செயற்கைக்கோள்களை செலுத்த
ஆரம்பித்தால் பல நாடுகளும்
தங்களது தகவல்
தொடர்பு செயற்கைக்கோள்களை உயரே
செலுத்த இந்தியா பக்கம்
திரும்பலாம்.
ஆகவே குலசேகரப்பட்டினத்தில்
எல்லா வகையான
ராக்கெட்டுகளையும்
செயற்கைக்கோள்களையும் செலுத்தும்
வசதிகளை செய்வதற்கு ஆகும்
செலவு வீண்
போகாது என்பது உறுதி.

No comments:

Post a Comment