Wednesday, 30 October 2013

அவசர உலகில் ஊசலாடும் உறவுகள்

இன்றைய அவசர உலகில் உறவுகள்
பெரும்பாலும் ஏனோதானோ என்ற
மேலோட்ட
நிலையிலேயே வாழ்கின்றனர்.
இதற்கு முக்கிய காரணம் உறவுகள்
அங்கங்கே பிரிந்து வாழ்வது தான்.
வாழ்க்கைக்கான நிலைக்களம்
ஒரே இடத்தில் அமையாமல் உறவுகள்
தொழிலின் காரணமாகவும் போரின்
காரணமாக ஏற்படும்
இடப்பெயர்வுகளாலும்
திசைக்கொன்றாய்
பிரிந்து விடுகிறார்கள்.
இந்தப்பிரிவு பல உறவுகள்
தமது வேர்
எது என்று தெரியாது வாழும்
நிலையை உருவாக்கிவிடுகிறது.
ஒவ்வொருவரின் இடங்கள்
தொலைதூரமாகி விடுகிற
காரணத்தினால் உறவுகள்
இல்லாமலே வாழப் பழகுகிறார்கள்.
அவர்கள் தனியாக வாழவேண்டும்
என்று வாழவில்லை,
வாழ்க்கை சூழல் அந்த
அளவுக்கு அவர்களை மாற்றி
விடுகிறது என்பதே நிஜம்.
இவ்வாறு தனித்து நிற்கின்ற
உறவுகள் அடுத்த சந்ததி யார்?
தங்கள் பெற்றோரின் உறவுகள் யார்?
என்று தெரியாமலே வளர வேண்டிய
சூழ்நிலை உருவாகின்றது.
இன்றைய உலகில் உறவுகள்
பரந்துபட்ட திசையிலே வாழ்வார்கள்.
குடும்ப விழாக்கள் என்றால்
மட்டுமே உறவுகளை அழைக்க
வேண்டியிருக்கிறது.
வந்து போகும் தூரமாக இருந்தால்
நேரில் வந்து அழைப்பார்கள்.
அல்லது தபால், இணையத்தளம்.
தொலைபேசி என்று காலங்கள்
மாறிவிட்டன. வருஷம்
ஒரு முறையோ,
நாலைந்து வருஷங்களுக்கு ஒரு
முறையோ கூட இப்படியான
அழைப்புக்கள் வரும், இந்த சூழல்
குடும்ப உறவுகளை விரத்தி
அடையச்செய்கிறது. அந்த
நிலையிலும் அந்த
அழைப்புகளுக்குப் போக முடியாத
சூழ்நிலை சிலருக்கு அமைந்து
விடும்போது
உறவுக்குடும்பங்களின்
கடைசி ஆணிவேரையும்
பிடுங்கிவிடுகிறது.
இதனால்
தலைமுறைகளிற்கு இடையிலான
இடைவெளி நிரந்தரமாகி
விடுகிறது. காலப்போக்கில்
உறவுகள்
யார்யாரோ என்றாகி விடுகிறது.
சிலர் இருக்கிறார்கள்.
உறவுகளை விட்டு தொலைதூரத்தில்
இருந்தாலும் தங்கள் பிறந்த
ஊர்களில் நடக்கிற கோவில்
திருவிழாக்களுக்கு எப்படியாவது
போய் விடுவார்கள். ஒருவிதத்தில்
இது உறவைப்
புதுப்பித்துக்கொள்கிற
முயற்சி தான். இன்னும் சிலர்
எவ்வளவு தொலைவில் இருந்தாலும்
வருஷத்தில் பத்து நாளாவது சொந்த
ஊருக்கு வந்து விடுவார்கள்.
பறவைகள் எவ்வளவு உயரத்தில்
பறந்து இரை தேடினாலும்
தங்கிப்போக
தனது கூட்டுக்கு வந்து போகிற
மாதிரிதான் இதுவும். இந்த
நிலைப்படுத்துதலில் உறவுகள்
விட்டுப்போகாமல் தொடரும்
வாய்ப்புண்டு.
யுத்தத்தால் புலம்பெயர்ந்தவர்கள்
மற்றும் சிலர் மட்டுமே, புலம்
பெயர்ந்த நிலையில் உறவுகளுக்கும்
இவர்களுக்கும் தொடர்பே இல்லாத
மாதிரி ஆகி விடுகிறார்கள்.
இவர்கள் உறவுகளின் எந்த
பலமுமின்றி எப்படியோ
தாங்களாகவே முயன்று தங்கள்
காலில் நிற்கப்
பழகி விடுகிறார்கள். இருக்கிற
இடத்தைச்சுற்றி முடிந்தவரை ஒரு
நட்பு வட்டத்தை உருவாக்கிக்
கொள்கிறார்கள். இப்படிப் பட்ட
நிலையில்
உறவு இவர்களுக்கு இரண்டாம்
பட்சமாகி விடுகிறது. நண்பர்கள்
இடையில் கிடைத்த உறவுகள்
முதலிடத்தை தட்டிச்செல்கிறது.
இப்படிப் பட்டவர்களுக்கும் ஒருவித
சிக்கல் இருக்கிறது.
உறவுகளை தொலைத்த
இவர்களுக்கு அவர்கள்
வீட்டுப்பிள்ளைகளின் திருமணம்
என்று வரும்போது தங்கள்
கௌரவத்தை நிலைநாட்ட உறவுகள்
அவசியமாகத் தோன்றுகிறது.
அப்போது மனச்சிக்கலிற்கு
ஆளாகிறார்கள்.
உறவுகளின் எந்தப்பின்னணியும்
இல்லாமல் தங்களை வளர்த்துக்
கொண்டவர்கள், தங்கள்
பெருமையை உறவுகளுக்கு பறை
சாற்றவாவது தேடிப்போய் தங்கள்
இல்ல விழாக்களுக்கு அழைப்பார்கள்.
ஒருவர் தனது உறவின்
பெருமையை ஊரறிவதைவிட,
உறவறிய விரும்புவதன்
விளைவே இதற்குக் காரணம். இந்த
சமயத்தில் உறவுகள் பார்க்கும்
ஆச்சரியப்பார்வைகள் தான்
இவர்களுக்குக் கிடைத்த மகுடம்.
இப்படி விட்டுப் பிடித்தாலும்
பெருமைபெறுவது உறவுகளின்
சங்கமத்தில் தான். அதை இவர்களும்
உணர்ந்தே இருக்கிறார்கள்.
இப்படி தேவைக்கும் பெருமைக்கும்
மட்டுமே உறவுகள் வேண்டும்
என்பது அத்தனை சரியல்ல. இன்றைய
விஞ்ஞான தொழில்நுட்பத்தில்
தூரம் ஒரு பொருட்டல்ல. தொலைத்
தொடர்பு வசதிகள் சர்வ
சாதாரணமாகி விட்ட நிலையில்
போன் தொடர்புகள் மூலம்
உறவு களை தக்க வைத்துக்கொள்ள
முடியும். அலட்சியமாக, பின்னர்
பார்த்துக்கொள்ளலாம் என்ற
மனநிலையுமே உறவுகளை
கிடப்பில் போட்டு விடுகின்றன.
நட்பை நேசியுங்கள்,
உறவுகளை மதியுங்கள்.
“சொந்த சகோதரனிலும் அதிகமாய்
சிநேகிப்பவருமுண்டு ” அதே நேரம்
நீங்கள் வேர்களாகவும்
கிளைகளாகவும் வெளிப்பட்ட
உறவுகளை தொலைத்து விடாதீர்கள்.
தொலைத்து விட்டால் அங்க
அடையாளங்கள் இல்லாமல்
போய்விடும். அங்க அடையாளங்கள்
மூலம் உங்களை நீங்கள் அடையாளம்
காட்டுவது உலகப்பிரகாரமான
அடையாளம். உறவுகள் வழியாக
நீங்கள் வெளிப்படுவது தான்
மிகச்சரியான அடையாளம்.
உறவுகள் இல்லாவிட்டால்
எங்கிருந்து நான் வந்தேன்?
என்று என்னையே நாங்கள்
கேள்விகேட்கும்
நிலைவந்துவிடும். என்வே, நாம்
எங்கிருக்கிறோம்
என்பது முக்கியமில்லை.
எமது உறவுகளுடன்
இருக்கிறோமா என்பது தான்
முக்கியம்.

No comments:

Post a Comment