Wednesday, 30 October 2013

சிதம்பரம்

பூமியின் மையப் பகுதி சிதம்பரம்
என்பார்கள். பல்லாயிரக்கணக்கான
கோவில்கள் இருந்தாலும், கோவில்
என்றால்
அது சிதம்பரத்தையே குறிக்கும்.
உருவம், அருவம், அருஉருவம்
என்று மூன்று நிலைகளில்
இறைவனை வழிபடுவது சைவசமயத்தின்
சிறப்பாகும். அந்த வகையில்
உருவமாகவும், அருவமாகவும்
இறைவனைக் கொண்டாடும் இடம்
சிதம்பரமாகும். சிதம்பரத்தைத்
தவிர்த்து மற்ற சைவ
ஆலயங்களிலெல்லாம்
லிங்கத்தையே வழிபடுவார்கள். இந்த
வழிபாடானது உருவமுள்ளதாகவும்,
உருவம் இல்லாததாகவும்
கருதப்படுவதால் அது அருஉருவ
வழிபாடாகும். சிதம்பரத்தில்
காட்சி தரும் ஆனந்தத் தாண்டவ
நடராஜரின்
திருவுருவமானது எல்லா சமயங்களின்
தத்துவங்களையும்
உள்ளடக்கியதாகும்.
நடராஜரின் அந்தத் திரு நடனக்
கூத்து ஒவ்வொரு அணுவிலும்
நடைபெறுவதாகச் சொல்வார்கள்.
அகிலம் முழுவதையும் வெளியாக -
அரங்கமாகக் கொண்டு இறைவன்
அங்கே நடனம் புரிகிறார். ஆக்கல்,
காத்தல், அழித்தல், அருளல், அடக்கல்
என்ற ஐந்தொழில்களையும்
திரு நடனத்தின் மூலம் புரிகிறார்.
இச்செயலே ஒவ்வொரு அணுவுக்குள்ளும்
இடைவிடாது நடந்தேறிக்
கொண்டிருக்கிறது.
அவருக்கு நான்கு கரங்கள். வலக்கரம்
ஒன்றில் ஏந்தியிருக்கும் டமருகம்
ஒலி மூலம் அவர் உலகைப்
படைக்கிறார் என்பதைக்
குறிப்பதாகும். மற்றொரு வலக்கரம்
சகல விதமான ஜீவர்களையும் அவர்
ஆசிர்வதிக்கிறார் என்பதைக்
குறிப்பதாகும். இடது கரம் ஒன்றைத்
தூக்கி நிற்கும் பாதத்தைச் சுட்டிக்
காட்டி ஒவ்வொரு ஜீவனும்
இறைவனின் திருவடியை அடைய
முயல வேண்டும் என்பதைக்
குறிப்பதாகும். மற்றொரு இடக்
கரத்தில் இருக்கும்
நெருப்பு அனைத்து மலங்களையும்
பொசுக்கி ஜீவனைப் பரிசுத்தமாக்கும்
தெய்வத் தன்மையை குறிக்கிறது.
ஆணவ மலத்தை அடக்கிக்
கட்டுப்படுத்தினால்தான் இறைவன்
திருவடிப் பேறு கிட்டும்
என்பதை முயலகனைக் காலால்
மிதித்து நசுக்குவது போல்
காட்டப்பட்டுள்ளது. துள்ளும்
பாவனையில் இருக்கும் மான் உருவம்
ஜீவர்களின் சஞ்சலத்தைக்
குறிப்பதாகும். புலிக்கு இருப்பதைப்
போன்ற வலிமையும், கொடிய
குணமும் தன்னல
உணர்வுக்கு உண்டு.
அதை அடியோடு அழித்து நம்மிலிருந்து பிரித்து எடுத்து விட
வேண்டும் என்பதை அரையில்
கட்டியிருக்கும் புலித்தோல்
உணர்த்துகிறது. கங்கையும்,
திங்களும் இன்பத்தையும்,
தண்மையையும் குறிக்கின்றன.
தாண்டவமாடும் முழுத் தோற்றமும்
முடிவில் அடைய வேண்டிய
பேரானந்த நிலையைக் குறிப்பதாகும்.
இப்படி அனைத்து இறைத்
தத்துவங்களையும் உள்ளடக்கிய
நடராஜரின் திருவுருவைக்
கண்டு மேலைநாட்டினரே வியந்து போற்றுகிறார்கள்
. இத்தகைய கலை வடிவம் தமிழ்
நாட்டைத் தவிர வேறு எந்த
நாட்டிலும் கிடையாது.
இந்தியாவின் மற்ற மாநிலங்களில்
கூட லிங்க வழிபாடுதான்
நடைபெறுகிறதேயன்றி நடராஜர்
வழிபாடு கிடையாது. மேலும்
சிதம்பர இரகசியம் என்பது அருவ
வழிபாடாகும். வெட்ட வெளியாகிய
விண்ணாகிய ஆகாசமே இறைவன்
என்பதை உணர்த்துவதாகும்.
தமிழனின் பண்பாடையும்,
கலாச்சாரத்தையும், ஆன்மிக
பேருணர்வையும்
உலகுக்கே பறைசாற்றும் ஒப்பற்ற
கோவில் சிதம்பரம் நடராஜர்
கோவிலாகும்.

No comments:

Post a Comment