Thursday, 10 April 2014

காதல் என்றால் என்ன?

காதல் என்றால் என்ன?

அதற்குள்ள
சக்தி என்ன? அது எப்படி உண்டாகின்றது?
அது எது வரையில் இருக்கின்றது?
அது எந்த எந்த சமயதில் உண்டாவது?
அது எவ்வெப்போது மறைந்து விடுகிறது?
அப்படி மறைந்து போய் விடுவதற்குக்
காரணம் என்ன? என்பவை போன்ற விஷயங்களைக்
கவனித்து ஆழ்ந்து யோசித்துப் பார்த்தால்
காதல் என்பதின் சத்தற்ற தன்மையும்
பொருளற்ற தன்மையும் உண்மையற்ற தன்மையும்
நித்தியமற்ற தன்மையும் அதைப்
பிரமாதப்படுத்துவதின் அசட்டுத் தனமும்
ஆகியவைகள் எளிதில் விளங்கிவிடும்.
ஆனால்
அந்தப்படி யோசிப்பதற்கு முன்னே இந்தக்
காதல் என்ற வார்த்தையானது இப்போது எந்த
அர்த்தத்தில் பிரயோகிக்கப்படுகின்றது?
உலக வழுக்கில் அது எப்படிப்
பயன்படுத்தப்பட்டு வருகின்றது?
இவற்றிற்கு என்ன ஆதாரம்? என்பவைகளைத்
தெரிந்து ஒரு முடிவு கட்டிக்கொள்ள
வேண்டியது அவசியமாகும்.
இன்றைய தினம் காதலைப் பற்றிப்
பேசுகிறவர்கள் “காதல்
என்பது அன்பு அல்ல, ஆசை அல்ல, காமம் அல்ல,
அன்பு -நேசம் -ஆசை -காமம் என்பவை வேறு,
காதல் வேறு, நட்பு வேறு என்றும்
அது ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும்
தங்களுக்குள் நேரே விவரித்துச் சொல்ல
முடியாத ஒரு தனிக் காரியத்திற்காக
ஏற்படுத்துவதாகும். அக்
காதலுக்கு இணையானது உலகத்தில்
வேறு ஒன்றுமே இல்லை என்றும்,
அது ஒரு ஆணுக்கு ஒரு பெண்ணிடமும்,
ஒரு பெண்ணுக்கு ஒரு ஆணிடமும்
மாத்திரந்தான் இருக்க முடியும்.
அந்தப்படி ஒருவரிடம் ஒருவருக்குமாக
இருவருக்கும் ஒரு காலத்தில் காதல்
ஏற்பட்டு விட்டால் பிறகு எந்தக் காரணம்
கொண்டும் எந்தக் காலத்திலும் அந்தக் காதல்
மாறவே மாறாது என்றும்
பிறகு வேறு ஒருவரிடமும் அந்தக் காதல்
ஏற்படாது அந்தப்படி மீறி அந்தப்
பெண்ணுக்கோ ஆணுக்கோ வேறு ஒருவரிடம்
ஏற்பட்டு விட்டால் அது காதலாயிருக்க
முடியாது. அதை விபச்சாரம் என்று தான்
சொல்ல வேண்டுமேயொழிய அது ஒருக்காலும்
காதலாகாது என்றும், ஒரு இடத்தில்
உண்மைக் காதல் ஏற்பட்டு விட்டால்
பிறகு யாரிடமும்
காமமோ விரகமோ மோகமோ என்றெல்லாம்
ஏற்படாது என்றும் சொல்லப்படுகின்றது.
மேலும் இந்தக் காதல்
காரணத்தினாலேயே ஒரு புருஷன்
ஒரே மனைவியுடனும்
ஒரு மனைவி ஒரே புருஷனுடனும்
மாத்திரம் இருக்க வேண்டியது என்றும்
கற்பித்து அந்தப்படி கட்டாயப்படுத்தியும்
வரப்படுகின்றது.
ஆனால்
இந்தப்படி சொல்லுகின்றவர்களை எல்லாம்
உலக அனுபோகமும் மக்களின் அனுபவ
ஞானமும் இல்லாதவர்கள்
என்றோ அல்லது இயற்கையையும் உண்மையையும்
அறியாதவர்கள்
என்றோ அல்லது உண்மையை அறிந்தும்
வேறு ஏதோ ஒரு காரியத்திற்காக
வேண்டி வேண்டுமென்றே மறைக்கின்றவர்கள்
என்றே தான் கருத வேண்டி இருக்கின்றது.
அன்றியும் இந்த மாதிரி விஷயங்களைப்
பற்றி நாம் சொல்லும்
மற்றொரு விஷயமென்னவென்றால் ஒரு ஆணின்
அல்லது ஒரு பெண்ணின் அன்பு, ஆசை, காதல்,
காமம், நட்பு, நேசம், மோகம், விரகம்
முதலாகியவைகளைப்
பற்றி மற்றொரு பெண்ணோ ஆணோ மற்ற
மூன்றாவதர்கள் யாராவதோ பேசுவதற்கோ,
நிர்ணயிப்பதற்கோ,
நிர்ப்பந்திப்பதற்கோ சிறிது கூட
உரிமையே கிடையாது என்றும்
சொல்கின்றோம்.
இன்னும் திறந்து வெளிப்படையாய்த்
தைரியமாய் மனித இயற்கையையும்
சுதந்திரத்தையும் சுபாவத்தையும்
அனுபவத்தையும் கொண்டு பேசுவதானால்
இவை எல்லாம் ஒரு மனிதன் தனக்கு இஷ்டமான
ஒரு ஓட்டலில் சாப்பிடுவது போலவும்
தனக்குப் பிடித்த பலகாரக் கடையில்
பலகாரம் வாங்வது போலவும் அவனுடைய
தனி இஷ்டத்தையும் மனோபாவத்தையும்
திருப்தியையும்
மாத்திரமே சேர்ந்ததென்றும் இவற்றுள்
மற்றவர்கள்
பிரவேசிப்பது அதிகப்பிரசங்கித் தனமும்
அனாவசியமாய் ஆதிக்கம்
செலுத்துவதுமாகுமென்றும் தான் சொல்ல
வேண்டும்.
இவ்வளவு பெருமையையும் அணியையும்
அலங்காரத்தையும் கொடுத்துப் பேசப்பட்ட
காதல் என்பதை முன்
குறிப்பிட்டபடி அது என்ன?
அது எப்படி உண்டாகிறது?
என்பதை யோசித்துப் பார்த்தால்
யாவருக்கும் சரி என்று விளங்கிவிடும்.
காதல் என்கின்ற வார்த்தை தமிழா?
வடமொழியா?
என்பது ஒரு புறமிருந்தாலும் தமிழ்
மொழியாகவே வைத்துக்கொண்டாலும்
அதற்கு ஆண் பெண் கூட்டுத் துறையில்
அன்பு, ஆசை, ஆவல், நட்பு, நேசம், விரகம்
என்பவைகளைத் தவிர வேறு பொருள்கள்
எங்கும் எதிலும் காணப்படவில்லை. அதன்
வேறுவிதமான பிரயோகமும் நமக்குத்
தென்படவில்லை.
அன்றியும் அகராதியில் பார்த்தாலும்
மேற்கண்ட பொருளைத் தவிர
வடமொழி மூலத்தை அனுசரித்துக் காதல்
என்பதற்கு கொலை, கொல்லல், வெட்டுதல்,
முறித்தல் என்கின்ற பொருள்கள் தான்
கூறப்பட்டிருக்கின்றன. மற்றப்படித் தனித்
தமிழ் மொழியில் பார்த்தாலும் ஆண்பெண்
சேர்க்கைக்கூட்டு முதலியவை சம்மந்தமான
விஷயங்களும் அன்பு, ஆசை, நட்பு, நேசம்
என்பவைகளைத் தவிர வேறு தமிழ் மொழியும்
நமக்குக் காணப்படவில்லை. இவைகளுடன்
காதல் என்பதைச் சேர்த்துக் கொண்டாலும்
இக்கருத்துக்களையே தான்
மாற்றி மாற்றி ஒன்றுக்கு மற்றொன்றாகக்
கூறப்படுகிறதே தவிர
காதலுக்கென்று வேறு பொருளில்லை.
ஆதலால் இவைகளன்றி காதல்
என்பதற்கு வேறு தனி அர்த்தம்
சொல்லுகின்றவர்கள்
அதை எதிலிருந்து எந்தப்
பிரயோகத்திலிருந்து கண்டு
பிடித்தார்களென்பதும்
நமக்கு விளங்கவில்லை.

No comments:

Post a Comment