Sunday, 31 March 2019

ஏப்ரல் 1

ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஒருவர் மற்றவரிடம் சென்று பொய் சொல்லி அதை உண்மை என நம்பவைத்து ஏமாற்றி மகிழ்வர்.
ஏமாற்றம் அடைந்தவரை, "ஏப்ரல் ஃபூல் ஏமாந்த ஃபூல்..." என கிண்டல் செய்வது, அவர்கள் ஏமாற்றம் அடைந்ததின் அடையாளமாக அவர்கள் மேல் கலர் சாயங்களை பூசுவது என இந்நாளில் சில மோசமான காரியங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் செய்து வருகின்றனர்.
ஏப்ரல் முதல் தினம் முட்டாள்கள் தினமான வரலாறுத் தொடர்பாக பல கதைகள் சொல்லப்பட்டாலும், காலண்டர் மாற்றம் விஷயத்தில் இது உருவானது என்பதுதான் பிரபல்யமான கருத்தாக இருக்கிறது.

பொதுவாக தொழிலாளர்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம் என சில தினங்களை கொண்டாடும் போது அந்தந்த தினம் யாருக்கானதோ அவர்களுக்கு செய்யும் கடமைகளை அந்த ஒரு நாள் மாத்திரம் சரிவரச் செய்வார்கள்.
உதாரணமாக, தொழிலாளர்கள் தினத்தன்று அவர்களுக்கான உதவிகளை செய்தல், அவர்களின் முன்னேற்றங்களுக்கான பாதைகளை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரியங்களை செய்வார்கள்.
தொழிலாளர்கள் தினம் உட்பட அனைத்து தினங்களிலும் அந்நாளைச் சார்ந்தவர்களை மற்ற தினங்களில் கண்டும் காணாமல் இருந்துவிட்டு அந்த ஒரு நாள் மாத்திரம் அவர்களுக்கான கடமைகளைச் செய்வது சரியான நடைமுறையல்ல. அது ஒரு நாள் கூத்துதான். என்றாலும், ஒரு நாளாவது செய்கிறார்களே என்ற கண்ணோட்டத்தில் ஒரு பேச்சுக்குப் பார்ப்போம்.
அதுபோல்தானே இந்த ஏப்ரல் 1லும் அறியாத மக்களை அறிவில் மேம்படுத்தும் காரியங்களை செய்யவேண்டும்.
ஆனால் இந்த ஏப்ரல் 1லாவது அவ்வாறு செய்யாமல் நன்றாக உள்ளவர்களையும் முட்டாள்களாக மாற்றும் அறிவீனமான காரியத்தையே செய்து வருகின்றனர்.
பள்ளியில், கல்லூரியில், தொழில் நிறுவனங்களில், அலுவலகங்களில் மற்றும் வீடுகளில் என எல்லா இடங்களிலும் அடுத்தவனை ஏமாற்றி முட்டாளாக்கும் காரியம் அரங்கேறுகிறது.
சில செய்தி ஊடகங்கள் கூட அன்றைய தினம் சில பொய்யான செய்திகளை வெளியிட்டுவிட்டு மறுநாள் ஏப்ரல் ஃபூல் என்று சொன்ன வரலாறுகளெல்லாம் உள்ளது.
இதற்கு அவர்கள் சொல்லும் வியாக்கியானம், "இதுவெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தானே" என்பதாகும்.
ஒருவனை முட்டாளாக்குவதை "ஜாலி" என்று சாதாரணமாக கடந்து போக முடியாது.
ஏனெனில், இவ்வாறாக ஜாலி என்று ஏமாற்றி ஏமாற்றி அன்று ஓர் உண்மையான நிகழ்வு நடந்தாலும் கூட நம்ப மறுக்கின்றனர்.
இப்படித்தான் ஒருவர் ஏப்ரல் 1 அன்று ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொள்கிறார். அவரது பெற்றொரிடம் சென்று தகவல் தெரிவித்தால் ஏப்ரல் 1 என்று ஏமாற்ற வேண்டாம் என்று நம்ப மறுக்கின்றனர் என்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
இந்த அவலத்திற்கு காரணம் யார்? ஏப்ரல் 1 என்றாலே ஜாலி என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் தானே!
இன்னும், இந்த தினத்தில் பாரதூரமான ஏமாற்றங்களினால் பல உயிர்கள் பரிபோயிருக்கிறது.
அந்த உயிர்கள் பரிபோனதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் காரணமா? அல்லது ஜாலிக்குத்தானே என்று சொல்லி இந்த பழக்கத்தை செய்து வளர்த்துக் கொண்டிருக்கும் அனைவருமா?
ஏமாற்றம் சிறிதோ பெரிதோ அது ஒரு மனிதனின் தன்மானப் பிரச்சனையாக பார்க்கப்படும் போது அதற்கென்று ஒரு தனி நாளை வைத்திருப்பதே முட்டாள்த்தனம். இதைத்தாண்டிய தனியொரு முட்டாள்த்தனம் அந்நாளுக்கு தேவையில்லை.
இந்நாளின் ஏமாற்றங்களில் பொய், கேலி கிண்டல் மாத்திரமில்லாமல் அத்துடன் அடுத்தவரின் மானத்திலும் உயிரிலும் விளையாடும் காரியங்களும் கலந்துள்ளது. இதுவும் ஒரு வகையான மனித உரிமை மீறலே!

No comments:

Post a Comment