Friday, 27 December 2019

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா...

தமிழ் மருத்துவ அறிவுரைப்பா...


மூளைக்கு வல்லாரை
முடிவளர நீலிநெல்லி
ஈளைக்கு முசுமுசுக்கை
எலும்பிற்கு இளம்பிரண்டை
பல்லுக்கு வேலாலன்
பசிக்குசீ ரகமிஞ்சி
கல்லீரலுக்கு கரிசாலை
காமாலைக்கு கீழாநெல்லி
கண்ணுக்கு நந்தியாவட்டை
காதுக்கு சுக்குமருள்
தொண்டைக்கு அக்கரகாரம்
தோலுக்கு அருகுவேம்பு
நரம்பிற்கு அமுக்குரான்
நாசிக்கு நொச்சிதும்பை
உரத்திற்கு முருங்கைப்பூ
ஊதலுக்கு நீர்முள்ளி
முகத்திற்கு சந்தனநெய்
மூட்டுக்கு முடக்கறுத்தான்
அகத்திற்கு மருதம்பட்டை
அம்மைக்கு வேம்புமஞ்சள்
உடலுக்கு எள்ளெண்ணை
உணர்ச்சிக்கு நிலப்பனை
குடலுக்கு ஆமணக்கு
கொழுப்பெதிர்க்க வெண்பூண்டே
கருப்பைக்கு அசோகுபட்டை
களைப்பிற்கு சீந்திலுப்பு
குருதிக்கு அத்திப்பழம்
குரலுக்கு தேன்மிளகே!
விந்திற்கு ஓரிதழ்தாமரை
வெள்ளைக்கு கற்றாழை
சிந்தைக்கு தாமரைப்பூ
சிறுநீர்க்கல்லுக்கு சிறுகண்பீளை
கக்குவானுக்கு வசம்புத்தூள்
காய்ச்சலுக்கு நிலவேம்பு
விக்கலுக்கு மயிலிறகு
வாய்ப்புண்ணிற்குமணத்தக்காளி
நீர்க்கோவைக்கு சுக்குமிளகுநீர்
நீரிழிவிற்கு ஆவாரைக்குடிநீ்ர்
வேர்க்குருவிற்கு பனைநுங்குநீ
வெட்டைக்கு சிறுசெருப்படையே
தீப்புண்ணா குங்கிலியவெண்ணை
சீழ்காதுக்கு நிலவேம்பு
நாப்புண்ணிற்கு திரிபலாவேலன்
நஞ்செதிர்க்க அவரிஎட்டி
குருதிகழிச்சலுக்கு துத்திதேற்றான்
குருதிகக்கலுக்கு இம்பூரல்வேர்
பெரும்பாட்டிற்கு அத்திநாவல்
பெருவயிறுக்கு மூக்கிரட்டை
கக்கலுக்கு எலுமிச்சைஏலம்
கழிச்சலுக்கு தயிர்சுண்டை
அக்கிக்கு வெண்பூசனை
ஆண்மைக்கு பூனைக்காலி
வெண்படைக்கு பூவரசு கார்போகி
விதைநோயா கழற்சிவிதை
புண்படைக்கு புங்கன்சீமையகத்தி
புழுகுடற்கு வாய்விளங்காமணக்கு
கால்வெடிப்பா மருதாணிகிளிஞ்சல்
கரும்படை வெட்பாலைசிரட்டை
கால்சொறிக்குவெங்காரபனிநீர்
கானாகடிக்கு குப்பைமேனிஉப்பே
உடல்பெருக்க உளுந்துஎள்ளு
உளம்மயக்க கஞ்சாகள்ளு
உடல்இளைக்க தேன்கொள்ளு
உடல் மறக்க இலங்கநெய்யே
அருந்தமிழர் வாழ்வியலில்
அன்றாடம்சிறுபிணிக்கு
அருமருந்தாய் வழங்கியதை
அறிந்தவரை உரைத்தேனே!!

Monday, 29 April 2019

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

70 கிலோ கிராம் எடையுள்ள மனித உடல் உள்ள மூலப் பொருள்கள்:

1. ஆக்ஸிஜன் 43 கிலோ கிராம்
2. கார்பன் 16 கிலோ கிராம்
3. ஹைட்ரஜன் 7 கிலோ கிராம்
4. நைட்ரஜன் 1.8 கிலோ கிராம்
5. கால்சியம் 1.0 கிலோ கிராம்
6. பாஸ்பரஸ் 780 கிராம்
7. பொட்டாசியம் 140 கிராம்
8. சோடியம் 100 கிராம்
9. குளோரின் 95 கிராம்
10. மக்னீசியம் 19 கிராம்
11. இரும்பு 4.2. கிராம்
12. ஃப்ளூரின் 2.6 கிராம்x
13. துத்தநாகம் 2.3 கிராம்
14. சிலிக்கன் 1.0 கிராம்
15. ருபீடியம் 0.68 கிராம்
16. ஸ்ட்ரோன்ட்டியம் 0.32 கிராம்
17. ப்ரோமின் 0.26 கிராம்
18. ஈயம் 0.12 கிராம்
19. தாமிரம் 72 மில்லி கிராம்
20. அலுமினியம் 60 மில்லி கிராம்
21. காட்மியம் 50 மில்லி கிராம்
22. செரியம் 40 மில்லி கிராம்
23. பேரியம் 22 மில்லி கிராம்
24. அயோடின் 20 மில்லி கிராம்
25. தகரம் 20 மில்லி கிராம்
26. டைட்டானியம் 20 மில்லி கிராம்
27. போரான் 18 மில்லி கிராம்
28. நிக்கல் 15 மில்லி கிராம்
29. செனியம் 15 மில்லிகிராம்
30. குரோமியம் 14 மில்லி கிராம்
31. மக்னீசியம் 12 மில்லி கிராம்
32. ஆர்சனிக் 7 மில்லி கிராம்
33. லித்தியம் 7 மில்லி கிராம்
34. செஸியம் 6 மில்லி கிராம்
35. பாதரசம் 6 மில்லி கிராம்
36. ஜெர்மானியம் 5 மில்லி கிராம்
37. மாலிப்டினம் 5 மில்லி கிராம்
38. கோபால்ட் 3 மில்லி கிராம்
39 . ஆண்டிமணி 2 மில்லி கிராம்
40. வெள்ளி 2 மில்லி கிராம்
41. நியோபியம் 1.5 மில்லி கிராம்
42. ஸிர்கோனியம் 1 மில்லி கிராம்
43. லத்தானியம் 0.8 மில்லி கிராம்
44. கால்ஷியம் 0.7 மில்லி கிராம்
45. டெல்லூரியம் 0.7 மில்லி கிராம்
46. இட்ரீயம் 0.6 மில்லி கிராம்
47. பிஸ்மத் 0.5 மில்லி கிராம்
48. தால்வியம் 0.5 மில்லி கிராம்
49. இண்டியம் 0.4 மில்லி கிராம்
50. தங்கம் 0.4 மில்லி கிராம்
51. ஸ்காண்டியம் 0.2 மில்லி கிராம்
52. தண்தாளம் 0.2 மில்லி கிராம்
53. வாளடியம் 0.11 மில்லி கிராம்
54. தோரியம் 0.1 மில்லி கிராம்
55. யுரேனியம் 0.1 மில்லி கிராம்
56. சமாரியம் 50 மில்லி கிராம்
57. பெல்யம் 36 மில்லி கிராம்
58. டங்ஸ்டன் 20 மில்லி கிராம்.
மனித உடலின் மூலப் பொருட்களாக உள்ள மேற்கண்ட 58 தனிமங்களில் ஆக்ஸிஜன், ஹைட்ரஜன் போன்ற வாயுக்களைத் தவிர, மற்றத் தனிமங்கள் அனைத்தும் மண்ணிலிருந்து கிடைத்தவை.
மண்ணோடு மீண்டும் கலப்பவை என்பது குறிப்பிடத்தக்கது
மனித உடலின் வளர்ச்சி 21 வயதோடு நின்று பொய் விடுகிறது. கடைசிவரை வளர்வது காது மட்டுமே. ஆயிரம் வருடம் வரை உயிர் வாழ்ந்தால் நமது காது ஒரு குட்டி யானைக் காது அளவிற்கு இருக்கும்
ஒரு சராசரி மனிதனின் உடலில் இருக்கும் ரோமங்களின் எண்ணிக்கை சுமார் 5 லட்சம்.
உடலில் ரோமங்கள் இல்லாத இடங்கள் உள்ளங்கை மற்றும் உள்ளங்கால்கள் மட்டுமே. பகல் வேளையில் விழித்திருந்தாலும், ஆயிரக்கணக்கான முறைகண்ணை சிமிட்டுகிறோம். இதை மொத்தமாக ஆய்வு செய்தால் இரவைத் தவிர பகலிலும் பாதி நேரம் கண்ணை மூடிக் கொண்டு தான் இருக்கிறோம்.
உடலின் வலுவான விஷயம், பல்லின் மீது இருக்கும் எனாமல் தான். இது யானை தந்தத்தை விட வலுவானது என்று கண்டுப்பிடித்திருக்கிறார்கள். விதம் விதமான பல்லாயிரக்கணக்கான வேலைகளை அலட்சியமாக செய்யக்கூடிய ஒரே ஆயுதம் நமது கை. தட்டில் இருக்கும் நூடுல்சை ஸ்பூனில் எடுக்கும்போது உடலில் உள்ள முப்பது இணைப்புகளும், 50 தசைகளும் இயங்க ஆரம்பிக்கின்றன.
நமது பாதங்களை பற்றி யோசித்தால் பிரமிப்பே மிஞ்சும் காரணம் ஒரு சதுர அடியில் வெறும் 3ல் ஒரு பங்கு உள்ள நமது பாதங்கள், 80 கிலோ எடையுள்ள நம் உடலை 70-80 வருடங்கள் தாங்கி நிற்கின்றன
இதயம் ஒரு நாளைக்கு சுமார் ஒரு லட்சம் தடவை சுருங்கி விரிகிறது. வருடத்திற்கு நான்கு கோடி தடவை. இதயத்தின் இடதுபக்கத்தை விட வலது பக்கம் சற்று பெரியதாக இருக்கும்.(MI@55)
நமது உடலில் நாலு அவுன்ஸ் சர்க்கரை, இரண்டு நீச்சல் குளங்களை அப்புறபடுத்த தேவையான க்ளோரின், 3 பவுண்டு கால்சியம், 20 ஆயிரம் தீக்குச்சிகள் உருவாக்க கூடிய அளவிற்கு பாஸ்பரஸ், 10 பார் சொப்புகளுக்கு தேவையான கொழுப்பு ஒரு ஆணி செய்யக்கூடிய அளவுக்கு இரும்பு என பல பொருட்கள் உள்ளன!!

Tuesday, 16 April 2019

விதுரர் நீதி...

விதுரர் நீதி

இந்த மூன்று சமயங்களில் எந்த முடிவும் எடுக்க கூடாது.

1. பசி வயிற்றை கிள்ளும் போது.
2. தூக்கம் நம் கண்களை சுழற்றும் போது.
3. போதையில் இருக்கும் போது.

இந்த மூன்று சமயங்களில் யாருக்கும் வாக்குறுதி தரக்கூடாது.

1. மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் போது.
2. மிகவும் துக்கத்தில் இருக்கும் போது.
3. மிகவும் கோபத்தில் இருக்கும் போது.

இந்த மூன்று விதமானவர்களின் நட்பை ஒதுக்க வேண்டும்.

1. நம்மைப் பற்றி உணராதவர்கள்.
2. நம்மைக் கண்டு பொறாமை கொள்பவர்கள்.
3. நமக்கு ஈடாக செயல்பட முடியாதவர்கள்.

இந்த மூன்று பேரை எப்போதும் மறக்கக் கூடாது.

1. ஆபத்தில் நமக்கு உதவி செய்தவர்கள்.
2. நம் குறைகளை பெரிது படுத்தாதவர்கள்.
3. நம்முடைய நலத்தை நாடுபவர்கள்.
விரோதியை நம்பலாம். ஆனால் துரோகியை ஒரு போதும் நம்பவும் கூடாது. மன்னிக்கவும் கூடாது.
ஒருவருடைய குணம் சரியில்லை என்று அறிந்த பின் அவர்களை விட்டு ஒதுங்கி போவதே நல்லது.
இல்லையேல் அவர்கள் தரத்திற்கு நம்மை தாழ்த்தி விடுவார்கள்...

Saturday, 6 April 2019

வாழ்க்கை என்பது ஒரு வட்டம்...


1 − வயதில் வெற்றி என்பது பிறர் துணையில்லாமல் நிற்பது.
4 − வயதில் வெற்றி என்பது ஜட்டியில் சிறுநீர் போகாமல் இருப்பது.
8 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது.
12 − வயதில் வெற்றி என்பது நல்ல நண்பர்கள் இருப்பது.
18 − வயதில் வெற்றி என்பது ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது.
23 − வயதில் வெற்றி என்பது பல்கலைகழகத்தில் பட்டம் பெற்றிருப்பது.
25 − வயதில் வெற்றி என்பது பணம் சம்பாதிப்பது.
30 − வயதில் வெற்றி என்பது குடும்பத் தலைவனாய் இருப்பது.
35 − வயதில் வெற்றி என்பது பணத்தை உருவாக்குவது.
45 − வயதில் வெற்றி என்பது இளமையாய் தோன்றுவது.
50 − வயதில் வெற்றி என்பது பெற்ற பிள்ளைகளுக்கு நல்ல கல்வியை தருவது.
55 − வயதில் வெற்றி என்பது இன்னும் உன் செயல்கள் திறமையாக இருப்பது.
60 − வயதில் வெற்றி என்பது இன்னும் ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பது.
65 − வயதில் வெற்றி என்பது நோயில்லாமல் இருப்பது.
70 − வயதில் வெற்றி என்பது யாருக்கும் பாரமில்லாமல் இருப்பது.
75 − வயதில் வெற்றி என்பது பழைய நட்பு தொடர்ந்திருப்பது.
81 − வயதில் வெற்றி என்பது வீட்டிற்கு வழி தெரிவது.
86 − வயதில் வெற்றி என்பது மறுபடியும் படுக்கையில் சிறுநீர் போகாமல் இருப்பது.
90 − வயதில் வெற்றி என்பது யார் துணையும் இல்லாமல் நடப்பது.

Tuesday, 2 April 2019

அண்ணன்களின் ரகசியமறிந்தவர்களாக தங்கைகளே இருக்கிறார்கள்...

அண்ணன்களின் ரகசியமறிந்தவர்களாக தங்கைகளே இருக்கிறார்கள்...

மணல் வீடு கட்டவோ கட்டியதை இடிக்கவோ தங்கைகள் தேவைப்படுகிறார்கள்... நடை பழகும் நாட்களில் கைபிடித்து கொள்ள அண்ணன்களையே தேர்ந்தெடுக்கிற ார்கள்... அடம் பிடித்தோ அழுது புரண்டோ பொட்டோ, பூவோ முதல் முதலில் தங்கைக்கே வாங்குகிறான் அண்ணன்... '' அ" வில் தொடங்கி சைக்கிள் பழக்கி மகிழுந்து வரை அண்ணன்களே ஆசிரியர் தங்கைகளுக்கு... அண்ணனாக மட்டுமன்றி நண்பனாகவும் சில நேரங்களில் தந்தையாகவும் மாற்றி விடுகிறார்கள் தங்கைகள்... தங்கைகளின் எந்தவித கோரிக்கையும் அண்ணன்களிடமே வருகிறது தங்கைகளுக்கான முதல் சிபாரிசை அண்ணன்களே முன்னெடுக்கிறார்கள்... அக்காக்களிடம் மறைத்த அண்ணன்களின் காதலை அறிந்தே இருக்கிறார்கள் தங்கைகள்... அண்ணன்களுக்காக அப்பாக்களிடம் கோபம் கொள்வதில் தங்கைகளே முதலில் இருக்கிறார்கள்... தங்கைகளில்லா வீடு அமைதியாகவே இருக்கிறது தீராத மௌனம் சுமந்து... திருமணமாகிச் செல்கையில் அப்பாக்கள் அழுகிறார்களோ இல்லையோ அழாமல் நடிக்க அண்ணன்கள் கற்றுக் கொள்கிறார்கள்..

முடி

தினமும் ஹேர் வாஷ் செய்வது நல்லதா?

ஆம், நிச்சயம் செய்ய வேண்டும். வெளியில் செல்லும்போது தூசு, புகை போன்றவை நம் கேசத்தின் வேர்க்கால்களில் படிந்து அரிப்பு உண்டாகும்; முடிகொட்டுதல் பிரச்னை ஏற்படும். இதைத் தடுக்க, தினமும் ஹேர் வாஷ் செய்துகொள்வது நல்லது. ஜலதோஷம் போன்ற பிரச்னைகளால் அவதிப்படுபவர்கள் இரண்டு நாளைக்கு ஒரு முறையாவது ஹேர் வாஷ் செய்துகொள்ளுங்கள். தினமும் ஹேர் வாஷ் செய்தால் கூந்தல் வறண்டு போகிறது என்பவர்கள் உங்கள் கூந்தலின் தன்மைக்கு ஏற்ப மைல்டு ஷாம்பூகளைத் தேர்வு செய்து பயன்படுத்தலாம். வெளியே செல்லும்போது கூடுமானவரை கேசத்தை ஏதேனும் ஸ்கார்ஃப் கட்டிப் பாதுகாத்துக்கொள்வது நல்லது.

எந்த எண்ணெய் தலைமுடிக்கு நல்லது?

ஆலிவ் எண்ணெய், பாதாம் எண்ணெய், லாவண்டர் எண்ணெய், செம்பருத்தி எண்ணெய், நெல்லிக்காய் எண்ணெய், கடுகு எண்ணெய் எனக் கூந்தலுக்கு எல்லா வகையான எண்ணெய்களையும் பயன்படுத்தலாம். அதற்கு முன், உங்கள் கூந்தலின் தன்மையைப் பொறுத்து எண்ணெய்த் தேர்வு இருப்பது அவசியம். கூந்தல் அதிக வறட்சியாக இருக்கிறது என்பவர்கள் ஆலிவ் எண்ணெய்யைத் தேர்வு செய்யலாம். கூந்தல் வலிமையிழந்து அடர்த்தியின்றி இருக்கிறது எனில் பாதாம் எண்ணெய் பெஸ்ட் சாய்ஸாக இருக்கும். சில்க்கி ஹேர் வேண்டுமெனில் செம்பருத்தி எண்ணெய்யைப் பயன்படுத்தலாம். உடல் சூடு காரணமாகக் கூந்தல் உதிர்கிறது எனில் வாரத்துக்கு மூன்று முறை நல்லெண்ணெய் மசாஜ் செய்துகொள்ளலாம். பொடுகுப் பிரச்னை நீங்க, அன்றாடம் நீங்கள் பயன்படுத்தும் எண்ணெய்யுடன் சிறிது லேவண்டர் ஆயிலைக் கலந்துகொள்ளலாம். உங்கள் கூந்தலின் தன்மை மற்றும் பிரச்னைகளுக்கு ஏற்ப சரியான எண்ணெய்யைத் தேர்வு செய்து பயன்படுத்தினால் கூந்தல் பிரச்னைகள் நிச்சயம் குறையும்.

எண்ணெய் அப்ளை செய்யும் முறை

முன்பெல்லாம் எண்ணெய் வைத்துத் தலைசீவித்தான் பெண்கள் வெளியே செல்வார்கள். ஆனால், இன்றிருக்கும் சுற்றுச்சூழல் மாசில் எண்ணெய் வைத்து வெளியே சென்றால் கூந்தலில் அழுக்குப் படிந்து பிசுபிசுப்புத் தன்மை ஏற்படும். எனவே, வெளியில் செல்லும்போது தலைக்கு எண்ணெய் அப்ளை செய்வதைத் தவிர்த்துவிடுங்கள். அதேபோன்று சிலர் தினமும் இரவு உறங்கச் செல்லும் முன் எண்ணெய் தேய்த்து, மறுநாள் காலையில் ஹேர்வாஷ் செய்வதைப் பழக்கமாகக் கொண்டிருப்பார்கள். இது பயனற்றது. நீங்கள் தேய்க்கும் எண்ணெய் தலையணை உறைக்குத்தான் செல்லும். எனவே, தினமும் குளிப்பதற்கு 20 நிமிடங்களுக்கு முன் கூந்தலில் எண்ணெய் தேய்த்து மசாஜ் செய்து வெதுவெதுப்பான நீரில் குளிப்பதை வழக்கமாக்கிக்கொள்ளுங்கள். எண்ணெய்யைக் கூந்தலில் மட்டுமல்லாது ஸ்கால்பிலும் படும்படி அப்ளை செய்வதே நல்ல பலன் அளிக்கும்

ஷாம்பூ தேர்வு

உங்களால் தினமும் சீயக்காய் பயன்படுத்தி ஹேர்வாஷ் செய்ய முடியும் எனில் சீயக்காயே பெஸ்ட் சாய்ஸ். இயலாது என்பவர்கள் PH மதிப்பு 4.5-க்கும் கீழ் உள்ள கெமிக்கல் ஃப்ரீ ஷாப்பூகளை வாங்கிப் பயன்படுத்துங்கள். விளம்பரங்களைப் பார்த்து அடிக்கடி ஷாம்பூவை மாற்றுவதைத் தவிர்க்க வேண்டும். ஷாம்பூவைப் பயன்படுத்தும்போது அப்படியே நேரடியாகக் கூந்தலில் அப்ளை செய்யாமல், ஒரு கப் தண்ணீரில் தேவைக்கேற்ப ஷாம்பூ எடுத்து, தண்ணீர் விட்டுக் கலந்துதான் பயன்படுத்த வேண்டும். இப்படிச் செய்வதன் மூலம் ஷாம்பூவில் உள்ள கெமிக்கல்கள் உங்கள் கூந்தலை அதிகம் பாதிக்காமல் இருக்கும். இதனால் இளநரை, கூந்தல் வறட்சி போன்றவற்றையும் தவிர்க்க முடியும்.

முடி உதிர்வைத் தடுக்க

அதிகப்படியான முடி உதிர்வு ஏற்படுகிறது எனில் முதலில் உங்கள் உடலில் உள்ள ஹீமோகுளோபின் அளவை செக் செய்வது அவசியம். ஹீமோகுளோபின் குறைவாக இருப்பின் கீரைகள், பேரீச்சம்பழம், நெல்லிக்காய், புதினா போன்றவற்றை உணவில் ரெகுலராக எடுத்துக் கொள்ள வேண்டும். இதன் மூலம் கூந்தல் பிரச்னையையும் சரிசெய்யலாம். வறட்சியால் முடி உதிர்வு ஏற்படுகிறது எனில் ஹேர் ஸ்பா ஒரு முறை செய்து கொள்ளலாம். அல்லது தினமும் ஆலிவ் ஆயில் மசாஜ் செய்துகொள்ளலாம். முடி வெடிப்பு அல்லது பிளவு காரணமாகவும் சிலருக்கு முடி உதிர்வு ஏற்படவும், வளர்ச்சி தடைப்படவும் செய்யும். இதுபோன்ற நிலையில் மாதம் ஒரு முறை கூந்தலின் அடிப்பகுதியை ட்ரிம் செய்து கொண்டால் கூந்தல் உதிர்வைக் கட்டுப்படுத்தலாம். ஈரமான கூந்தலுடன் தலைசீவுவது கேசத்தை வலிமையிழக்கச்செய்து முடி உதிர்வை அதிகப்படுத்தும். எனவே, கூந்தலை நன்கு காயவைத்த பின்னர் பெரிய பற்கள் கொண்ட சீப்பைப் பயன்படுத்தி சிக்குகளை எடுத்து பின் தலைவாரிக் கொள்ளவும். ஹேர் டிரையர்கள் பயன்படுத்துகிறீர்கள் எனில் கூல் டிரையர்கள் பயன்படுத்துவது நல்லது.

ஹென்னா பயன்படுத்துபவர்களின் கவனத்துக்கு

ஹேர் ஸ்ட்ரைட்டனிங், கர்லிங், கலரிங் என அடிக்கடி ஹேர் பேட்டர்னை மாற்றுபவர்கள் ஹென்னா பயன்படுத்தினால் சரியான ரிசல்ட் இருக்காது. நரைமுடியை மறைக்க ஹென்னா பயன்படுத்துகிறீர்கள் எனில் பிளைன் ஹென்னா பவுடருடன் பீட்ரூட் கலவை 4 டீஸ்பூன் கலந்து தலைக்கு அப்ளை செய்து 20 நிமிடங்களுக்குப் பின் ஹேர் வாஷ் செய்ய அழகான பர்கண்டி கலர் ஹேர் கிடைக்கும். அடர்த்தி அல்லது கண்டிஷனிங் காரணங்களுக்காக ஹென்னா பயன்படுத்துபவர்கள் ஹென்னா பவுடருடன் சிறிதளவு டீ -டிக்காக்ஷன் சேர்த்து கேசத்தில் அப்ளை செய்து 20 நிமிடங்கள் கழித்து ஹேர் வாஷ் செய்ய நல்ல பலன் கிடைக்கும்.

Monday, 1 April 2019

கஞ்சி...

கஞ்சி என்றதும், `அது காய்ச்சல் நேரத்தில் தரப்படும் பத்திய உணவாச்சே’ என்ற எண்ணம் வரும். உண்மையில் கஞ்சி பத்திய உணவு மட்டுமல்ல. உடலுக்கு ஊட்டம் தரும் உணவும்கூட. தாய்ப்பாலுக்குப் பிறகு, நாம் குழந்தைகளுக்குத் தரும் முதல் உணவு கஞ்சி. கைக்குழந்தைகளுக்கு மட்டுமன்றி வீட்டின் வயதான மூத்த குழந்தைகளுக்கும் இதுவே பிரதான உணவாகும். சித்த மருத்துவத்தில் ஏராளமான கஞ்சி வகைகள் உள்ளன. மருத்துவ நூல்களில் கஞ்சி என்பது நீர்ச்சோறு என்றும், புனற்பாகம் என்றும் கூறப்பட்டுள்ளது.


`புனற்பாக முத்தோடம் போக்கு மருந்தினற்
பாகந்தனை யடக்குந் - தனிக்குணங்க
நம்மட்டோ வாய்க்கிதமா மாரோக்கியங் கொடுக்குங்
கம்மிட்ட பூவனமே காண்'

என்கிறது ஒரு சித்த மருத்துவ செய்யுள்.
உடலை இயங்க வைக்கும் ஆற்றலாக இருக்கும் வாதம், பித்தம், கபம் என்ற மூன்று சக்திகளை நல்லமுறையில் செயல்படுத்தும் ஆற்றல் கஞ்சிக்கு உண்டு. இந்த வகைக் கஞ்சிகள் நாவுக்கு இதமாகவும் ஆரோக்கியம் தருவதாகவும் உள்ளன.

இந்தக் கஞ்சிகளை எளியமுறையில் நாமே வீடுகளில் தயாரித்துக்கொள்ள முடியும். அப்படியான சில கஞ்சி வகைகளைப் பார்க்கலாம்.

பஞ்சமுட்டிக் கஞ்சி

பஞ்ச முட்டிக்கஞ்சி செய்வதற்குத் துவரம் பருப்பு, உளுந்து, பச்சரிசி, சிறுபயறு, கடலைப் பருப்பு போன்றவை தேவைப்படும். இவை அனைத்தையும் சரிசமமாக எடுத்து, தனித்தனியே வறுத்து வைத்துக்கொள்ள வேண்டும். அதன் பிறகு சுத்தமான பருத்தித் துணியில் போட்டுக் கட்டி ஒரு பாத்திரத்தில் போட்டு நீர்விட்டுக் கொதிக்க வைக்க வேண்டும். நீர், கால் பங்காக வற்றியதும் முடிச்சை அவிழ்த்தால் கிடைப்பதே பஞ்ச முட்டிக்கஞ்சி. 

அருந்துவதற்குச் சுவையாக இருக்கும் இந்தக் கஞ்சியைப் புரதச்சத்து மற்றும் ஊட்டச்சத்து குறைவாக உள்ள குழந்தைகளுக்குக் கொடுக்கலாம். மேலும், அதிகப்படியாகப் பட்டினி கிடப்போருக்குக் கொடுப்பதால் உடல் வலிமை கிடைக்கும்.

பால் கஞ்சி

அரிசியைப் பசும்பாலில் போட்டு நன்றாக வேகவைத்து கஞ்சியாக்கினால் கிடைப்பதே பால் கஞ்சி. இதைக் குடிப்பதால் உடலின் உள்சூடு குறைந்து, பித்தம் மற்றும் அதனால் ஏற்படும் சிரமங்கள் நீங்கும். தாம்பத்தியக் குறைபாடுகள் நீங்கும்.

இதை `சுரை தரு பாலில் வெந்த சோறு கஞ்சி கொள்ள
லெறிதரு பித்தந்தாழு மெழுமதி விந்து வுந்தான்’  என்ற சித்தர் பாடல்மூலம் அறியலாம்.

இன்றைய நாகரிக உலகில் பெரும்பாலும் உட்கார்ந்து பணிபுரிவது அதிகரித்து வருகிறது. அதுவும் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்பாடு அதிகம் இருப்பதால் பார்வைக் குறைபாடும், அதனால் மனச்சோர்வும் ஏற்பட்டு உடலில் பித்தம் அதிகரிக்கிறது. பால்கஞ்சி குடித்தால் பித்தம் தணிந்து உடல் ஆரோக்கியம் கிடைக்கும்.

பொரிக் கஞ்சி

`பொரிதரு கஞ்சி பித்தம் போக்கி…’

என்று தொடங்கும் பாடல் ஒன்று உண்டு. பொரி என்றால் நம் அனைவருக்கும் ஆயுதபூஜைதான் நினைவுக்கு வரும். ஆண்டுக்கொரு முறை ஆயுதபூஜை தினத்தில் மட்டுமே பயன்படுத்தப்படும் பொருளாகப் பொரி உள்ளது. இல்லையென்றால் வீட்டில் தின்பண்டங்கள் எதுவும் இல்லாதநேரத்தில் மட்டுமே பொரி நம் நினைவில் வரும். புறந்தள்ளப்பட்ட பொரியில் கஞ்சி செய்து குடித்தால் பல்வேறு நோய்களுக்குத் தீர்வு கிடைக்கும்.
பொரியை நீர்விட்டு நன்றாக வேகவைத்துச் சாப்பிட்டால் வயிற்றுப்போக்கால் ஏற்படும் சோர்வு, உடலில் நீர்த்தன்மை குறைதல் போன்றவை நீங்கும். இதைச் சிறு குழந்தைகள் முதல் முதியவர்கள் வரை செய்து குடித்துப் பயன்பெறலாம்.

உளுந்தங்கஞ்சி

உளுந்தங்கஞ்சி பற்றி நாம் அனைவருமே கேள்விப்பட்டிருப்போம். சிலர் சாப்பிட்டிருக்கவும் வாய்ப்பு உண்டு. உளுந்தைத் தோலுடன் இரண்டாக உடைத்து நீர்விட்டு நன்றாகக் குழைய வேகவைக்க வேண்டும். அதனுடன் சுக்கு, கருப்பட்டி சேர்த்துக் கஞ்சியாகச் செய்து குடிக்கலாம்.

உளுந்தங்கஞ்சி வலி நோய்களைப் போக்கக்கூடியது. அதுமட்டுமன்றி பெண்களுக்கு ஏற்படும் சினைப்பை நீர்க்கட்டிகள், அதனால் ஏற்படும் ஹார்மோன் குறைபாடுகளுக்கு மிகச்சிறந்த தீர்வாக உளுந்து அமையும். இன்று, 99 சதவிகித பெண்களுக்கு சினைப்பை நீர்க்கட்டிகள் இருக்கிறது. அதைச் சரிசெய்ய உடல் உழைப்பு மற்றும் வாழ்வியல் மாற்றங்களோடு உளுந்தங்கஞ்சி போன்ற உணவுகளைச் சாப்பிடுவதன்மூலம் நல்ல மாற்றத்தைப் பெறமுடியும்.

கஞ்சி அன்னம்!

`கஞ்சி அன்னத்திற் காயம் பருத்திடு
மஞ்சி வெப்பகலுஞ் சிலேத்ம மோ
விஞ்சி யுற்றிடு மேனி மினுத்திடும்
பஞ்சு போல பறந்திடும் பித்தமே'

என்ற பாடல் வரிகளின்மூலம் இதை அறியலாம்.

வடித்த கஞ்சியில் சோற்றைச் சேர்த்து கஞ்சியும் அன்னமுமாகக் குடிப்பதே கஞ்சி அன்னம். இதைத் தொடர்ந்து குடித்து வந்தால் மெலிந்த தேகம் பருக்கும். உடலில் உள்ள அதிகப்படியான பித்தத்தை சமன்செய்து, உடல் இயக்கத்துக்கு உதவும்; உடல் வெப்பத்தைக் குறைக்கும். இந்தக் கஞ்சி அன்னத்தைச் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை உண்ணலாம்

வெயில் காலத்தில் அனைவரும் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு!

வெயில் காலத்தில் பெண்கள் கட்டாயம் சாப்பிட வேண்டிய உணவு!
''வெயில் காலங்களில் பலருக்கும் திட உணவு சாப்பிட பிடிக்காது. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கு கேழ்வரகுக் கூழ் நல்லதொரு உணவு.''
வெயில் காலத்தில் வயிற்றுக்குக் குளுமையான ஓர் உணவு கேழ்வரகுக் கூழ். அதனால்தான், வெயில் லேசாகத் தலைகாட்ட ஆரம்பித்தவுடனே சாலையோரங்களில் திடீர் கேழ்வரகுக் கூழ் கடைகள் உருவாகிவிடுகின்றன. வீட்டிலேயே முறைப்படி கேழ்வரகைக் கூழை எப்படித் தயாரிப்பது.
கேழ்வரகுக் கூழ் தயாரிப்பது எப்படி?
கேழ்வரகை நிறையப் பேர் புடைத்து அப்படியே அரைத்து விடுகிறார்கள். அப்படியில்லாமல், கேழ்வரகைப் புடைத்து, கழுவி, காயப் போட்டு, லேசாக வறுத்தப் பிறகுதான், மெஷினில் கொடுத்து அரைக்க வேண்டும். அப்போதுதான் கூழ் சுவையாகவும் மணமாகவும் இருக்கும்.
ஒரு கப் கேழ்வரகு மாவை, முந்தைய நாள் இரவு 3 கப் தண்ணீரில் உப்புப் போட்டுக் கரைத்து வைத்து விடுங்கள். மறுநாள் மதியம் கூழ் காய்ச்சுவதற்கு ஏற்றப் பதத்தில் மாவு புளித்திருக்கும். கேழ்வரகு மாவுப் புளித்தால்தான் கூழ் சுவையாக இருக்கும். அடுத்து, ஒரு கப் கேழ்வரகு மாவுக்குக் கால் கப்புக்கும் கொஞ்சம் கூடுதலாக அரிசி நொய் எடுத்துக்கொள்ளுங்கள். இரண்டு கப் தண்ணீரில் களைந்த நொய்யைப் போட்டு, நன்கு வேக விடுங்கள். வெந்ததும், புளித்த கேழ்வரகு மாவை இதனுடன் சிறிது சிறிதாக ஊற்றி, அடுப்பை மிதமான தீயில் வைத்து கை விடாமல் கிளறிக்கொண்டே இருங்கள். 20 நிமிடத்தில் கேழ்வரகு மாவு வெந்து, கூழ் ரெடியாகி விடும். இதை அப்படியே ஆற விட்டு எடுத்து வைத்து விடுங்கள். மறுநாள் காலையில் தேவையான தண்ணீர் விட்டுக் கரைத்து, தயிர், நறுக்கிய வெங்காயம் சேர்த்து குடிக்கலாம்.
கேழ்வரகுக் கூழ் செய்யும்போது, கேழ்வரகு மாவில் பாதியளவுக்கு கம்பு மாவைச் சேர்த்தும் கூழ் செய்யலாம்.
கேழ்வரகு கூழ் யார், எப்படிக் குடிக்க வேண்டும்?
கேழ்வரகு கூழ் உடம்புக்கு நல்ல குளிர்ச்சித் தருகிற உணவு. இதை நொதிக்க வைத்து செய்முறையில் தயாரிக்கிற கூழை எல்லோருமே குடிக்கலாம்.
ஆனால், உடல் பருமன் பிரச்னை இருப்பவர்கள், இந்த முறையில் தயாரித்த கூழைக் குடித்தால் எடை இன்னமும் அதிகமாகலாம். இவர்கள், கேழ்வரகு மாவை நீரில் கரைத்து, அப்படியே காய்ச்சிக் குடிக்கலாம்.
நீரிழிவு பிரச்னை இருப்பவர்கள், கேழ்வரகில் கூழுக்குப் பதில் களியாகச் செய்து சாப்பிடலாம்.
குழந்தைகளுக்குக் கூழுடன் தயிர், சாம்பார் வெங்காயத்தை பொடிப்பொடியாக நறுக்கிப் போட்டு கொடுத்தால், உடல் குளிர்ச்சியாவதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் கிடைக்கும்.
வெளியே சூடு அதிகமாக இருக்கும்போது, நம் உடம்பின் உள்ளுறுப்புகளிலும் சூடு அதிகமாக இருக்கும். அதனால், உணவு  ஜீரணமாவதிலும் பிரச்னை இருக்கும்.  அதனால்தான்,  வெயில் காலங்களில் பலருக்கும் திட உணவு சாப்பிட பிடிக்காது. இந்தப் பிரச்னை இருப்பவர்களுக்கும் கேழ்வரகுக் கூழ் நல்லதொரு உணவு.
ரத்த சோகையோ அல்லது கால்சியம் சத்துக் குறைபாடோ இல்லாத பெண்களை பார்க்கவே முடியாது என்கிற நிலைமையில்தான், இன்றைக்குப் பெண்களின் ஆரோக்கியம் இருக்கிறது. அவர்கள் எல்லோருமே வாரம் இரண்டு அல்லது மூன்று நாள்கள் கேழ்வரகுக் கூழை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். மேலே சொன்ன இரண்டு பிரச்னைகளுக்குமே ஒரே தீர்வு கேழ்வரகுக் கூழ்தான்.

உதவி...

உலக பணக்காரர் கம்ப்யூட்டர் உலகின் பேரரசன் பில்கேட்ஸிடம் ஒருவர் கேட்கிறார்.

உங்களை விடப் பணக்காரர் யாராவது இருக்கிறாரா ?

ஆம்,ஒருவர் இருக்கிறார்.
பல ஆண்டுகளுக்கு முன்பு, நான் வேலையிலிருந்து டிஸ்மிஸ் செய்யப்பட்டேன்.
நியூயார்க் நகர விமான நிலையம் சென்றேன்.
நாளிதழ்களின் தலைப்புச் செய்திகளைப் படித்துக் கொண்டிருந்தேன்.
நாளிதழ் ஒன்றினை விரும்பி வாங்கலாம் என நினைத்தேன்.
ஆனால், என்னிடம் சில்லறை நாணயம் இல்லை. எனவே, அதை விடுத்தேன். அப்போது,
ஒரு கருப்பினச் சிறுவன், என்னை அழைத்து, அந்த நாளிதழ் பிரதியைக் கொடுத்தான்.
என்னிடம் சில்லறை இல்லை எனக் கூறினேன். அவன் பரவாயில்லை ,
இலவசமாகக் கொடுக்கிறேன் என்றான்.
மூன்று மாதங்கள் கழித்து, நான் அங்கு சென்றேன்.
மறுபடியும், அதே கதை நடந்தது. அந்தச் சிறுவன் நாளிதளை இலவசமாகக் கொடுத்தான்.
ஆனால், நான் வாங்க மறுத்தேன். அவன், அவனுக்கு வந்த அன்றைய லாபத்திலிருந்து தருவதாகக் கூறி கொடுத்தான்.
19 வருடங்கள் கழிந்தன.
நான் பணக்காரன் ஆகிவிட்டேன்.
அந்தச் சிறுவனைக் காணும் ஆவல் எனக்கு வந்தது.
ஒன்றரை மாதத் தேடுதலுக்குப் பின் அவனைக் கண்டு பிடித்தேன்.
அவனைக் கேட்டேன்.
"என்னைத் தெரிகிறதா ?"
"தெரிகிறது. நீங்கள் புகழ் வாய்ந்த பில்கேட்ஸ்"
பல வருடங்களுக்கு முன்னால், இரண்டு முறை இலவசமாக நாளிதழ்களை வழங்கினாய் எனக் கூறினேன். தற்போது அதற்காக , நீ என்னவெல்லாம் விடும்புகிறாயோ, அவற்றைக் கைமாறாகத் தர விரும்புகிறேன் என்றேன்.
உங்களால் அதற்கு ஈடு செய்ய முடியாது. என்றான் அந்தக் கருப்பு இளைஞன்....
ஏன் ? என்றேன் நான்.
அந்த இளைஞன்
"நான் ஏழையாய் இருந்த போது , உங்களுக்குக் கொடுத்தேன்
ஆனால், நீங்கள் பணக்காரர் ஆன பின்னே எனக்குக் கொடுக்க வருகிறீ்ர்கள்.
ஆகவே, நீங்கள் எவ்வாறு சரிக்கட்டமுடியும் ??? " என்றான்...

கருப்பு இளைஞன் தான் என்னை விடப் பணக்காரன் என்பதை உணர்ந்தேன் என்றார் பில்கேட்ஸ்.
கொடுப்பதற்கு நீ பணக்காரனாக இருக்க வேண்டுமென்பதோ,பணக்காரன் ஆகும் வரை காத்திருக்க வேண்டும் என்பதோ கிடையாது....
உதவ வேண்டும் என்ற குணத்திற்கு கால, நேரம் அல்லது ஏழை, பணக்காரன் என்பது கிடையாது.

Sunday, 31 March 2019

ஏப்ரல் 1

ஏப்ரல் முதல் தேதியை முட்டாள்கள் தினம் என்று கொண்டாடி வருகின்றனர்.

இதில் ஒருவர் மற்றவரிடம் சென்று பொய் சொல்லி அதை உண்மை என நம்பவைத்து ஏமாற்றி மகிழ்வர்.
ஏமாற்றம் அடைந்தவரை, "ஏப்ரல் ஃபூல் ஏமாந்த ஃபூல்..." என கிண்டல் செய்வது, அவர்கள் ஏமாற்றம் அடைந்ததின் அடையாளமாக அவர்கள் மேல் கலர் சாயங்களை பூசுவது என இந்நாளில் சில மோசமான காரியங்களை சிறியவர் முதல் பெரியவர் வரை அனைவரும் செய்து வருகின்றனர்.
ஏப்ரல் முதல் தினம் முட்டாள்கள் தினமான வரலாறுத் தொடர்பாக பல கதைகள் சொல்லப்பட்டாலும், காலண்டர் மாற்றம் விஷயத்தில் இது உருவானது என்பதுதான் பிரபல்யமான கருத்தாக இருக்கிறது.

பொதுவாக தொழிலாளர்கள் தினம், அன்னையர் தினம், மகளிர் தினம் என சில தினங்களை கொண்டாடும் போது அந்தந்த தினம் யாருக்கானதோ அவர்களுக்கு செய்யும் கடமைகளை அந்த ஒரு நாள் மாத்திரம் சரிவரச் செய்வார்கள்.
உதாரணமாக, தொழிலாளர்கள் தினத்தன்று அவர்களுக்கான உதவிகளை செய்தல், அவர்களின் முன்னேற்றங்களுக்கான பாதைகளை முன்னெடுத்துச் செல்லுதல் போன்ற காரியங்களை செய்வார்கள்.
தொழிலாளர்கள் தினம் உட்பட அனைத்து தினங்களிலும் அந்நாளைச் சார்ந்தவர்களை மற்ற தினங்களில் கண்டும் காணாமல் இருந்துவிட்டு அந்த ஒரு நாள் மாத்திரம் அவர்களுக்கான கடமைகளைச் செய்வது சரியான நடைமுறையல்ல. அது ஒரு நாள் கூத்துதான். என்றாலும், ஒரு நாளாவது செய்கிறார்களே என்ற கண்ணோட்டத்தில் ஒரு பேச்சுக்குப் பார்ப்போம்.
அதுபோல்தானே இந்த ஏப்ரல் 1லும் அறியாத மக்களை அறிவில் மேம்படுத்தும் காரியங்களை செய்யவேண்டும்.
ஆனால் இந்த ஏப்ரல் 1லாவது அவ்வாறு செய்யாமல் நன்றாக உள்ளவர்களையும் முட்டாள்களாக மாற்றும் அறிவீனமான காரியத்தையே செய்து வருகின்றனர்.
பள்ளியில், கல்லூரியில், தொழில் நிறுவனங்களில், அலுவலகங்களில் மற்றும் வீடுகளில் என எல்லா இடங்களிலும் அடுத்தவனை ஏமாற்றி முட்டாளாக்கும் காரியம் அரங்கேறுகிறது.
சில செய்தி ஊடகங்கள் கூட அன்றைய தினம் சில பொய்யான செய்திகளை வெளியிட்டுவிட்டு மறுநாள் ஏப்ரல் ஃபூல் என்று சொன்ன வரலாறுகளெல்லாம் உள்ளது.
இதற்கு அவர்கள் சொல்லும் வியாக்கியானம், "இதுவெல்லாம் ஒரு ஜாலிக்காகத்தானே" என்பதாகும்.
ஒருவனை முட்டாளாக்குவதை "ஜாலி" என்று சாதாரணமாக கடந்து போக முடியாது.
ஏனெனில், இவ்வாறாக ஜாலி என்று ஏமாற்றி ஏமாற்றி அன்று ஓர் உண்மையான நிகழ்வு நடந்தாலும் கூட நம்ப மறுக்கின்றனர்.
இப்படித்தான் ஒருவர் ஏப்ரல் 1 அன்று ரயில் முன் விழுந்து தற்கொலை செய்துக்கொள்கிறார். அவரது பெற்றொரிடம் சென்று தகவல் தெரிவித்தால் ஏப்ரல் 1 என்று ஏமாற்ற வேண்டாம் என்று நம்ப மறுக்கின்றனர் என்று ஒரு நிகழ்வு நடந்துள்ளது.
இந்த அவலத்திற்கு காரணம் யார்? ஏப்ரல் 1 என்றாலே ஜாலி என்று சொல்லி ஏமாற்றுபவர்கள் தானே!
இன்னும், இந்த தினத்தில் பாரதூரமான ஏமாற்றங்களினால் பல உயிர்கள் பரிபோயிருக்கிறது.
அந்த உயிர்கள் பரிபோனதற்கு சம்பந்தப்பட்டவர்கள் மட்டும் காரணமா? அல்லது ஜாலிக்குத்தானே என்று சொல்லி இந்த பழக்கத்தை செய்து வளர்த்துக் கொண்டிருக்கும் அனைவருமா?
ஏமாற்றம் சிறிதோ பெரிதோ அது ஒரு மனிதனின் தன்மானப் பிரச்சனையாக பார்க்கப்படும் போது அதற்கென்று ஒரு தனி நாளை வைத்திருப்பதே முட்டாள்த்தனம். இதைத்தாண்டிய தனியொரு முட்டாள்த்தனம் அந்நாளுக்கு தேவையில்லை.
இந்நாளின் ஏமாற்றங்களில் பொய், கேலி கிண்டல் மாத்திரமில்லாமல் அத்துடன் அடுத்தவரின் மானத்திலும் உயிரிலும் விளையாடும் காரியங்களும் கலந்துள்ளது. இதுவும் ஒரு வகையான மனித உரிமை மீறலே!