Friday, 15 August 2014

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும் நோய்களும்...

சித்தர்கள் வகுத்த உறுப்புகளும்
நோய்களும்

சி த்தர்கள் கண்டறிந்த நோய்கள் 4448. அவை,
உடல் முழுவதும் தோன்றுவதாகும்.
உடலிலுள்ள உறுப்புகள் சிலவற்றில் இந்த
நோய்கள் உண்டாகுமென்றும், நோய் உண்டாகும்
உறுப்புகளாகப் பத்தொன்பதைக் கூறி,
அவை ஒவ்வொன்றிலும் தோன்றக் கூடிய
நோய்களின் எண்ணிக்கை பிரித்துக்
கூறப்படுகிறது.
1. தலை 307
2. வாய் 18
3. மூக்கு 27
4. காது 56
5. கண் 96
6. பிடரி 10
7. கன்னம் 32
8. கண்டம் 6
9. உந்தி 108
10. கைகடம் 130
11. குதம் 101
12. தொடை 91
13. முழங்கால் கெண்டை 47
14. இடை 105
15. இதயம் 106
16. முதுகு 52
17. உள்ளங்கால் 31
18. புறங்கால் 25
19. உடல்உறுப்பு எங்கும் 3100
ஆக 4448 என்பனவாகும்.
இவ்வாறு உறுப்புகள் தோறும் உண்டாகும்
நோயின் எண்ணிக்கையைப் பிரித்துத்
தொகைப்படுத்திக் கூறியிருப்பது, சித்த
மருத்துவத்தின் தொன்மை, வளர்ச்சி ஆகிய
இரண்டையும் காட்டுவதாகக் கொள்ளலாம்.
உலக மருத்துவம், இவ்வாறு நோய்களைத்
தொகையாக்கிக் கூறுவது இல்லை என்பது
கருதுதற்குரியது.
கிருமிகளினால் உண்டாகும் நோய்கள்
குடலில் உருவாகும் பூச்சிகள்
நோய்களை உண்டாக்கும் கிருமிகள்
என்று குறிப்பிடப் படுகின்றன. அவை,
குடலில் உண்டாகும் நோய்களின்
மூலமாகவும், கெட்ட உணவுகளின்
மூலமாகவும் உண்டாகும். அவை, பூ நாகம்,
தட்டைப்புழு, கொக்கிப்புழு, சன்னப்புழு,
வெள்ளைப் புழு, செம்பைப் புழு,
கீரைப்புழு, கர்ப்பப் புழு,
திமிர்ப்பூச்சி எனப் பலவாகும்.
இவை துர்நாற்றமடைந்த மலத்தினாலும்,
சிறுநீர், இரத்தம், விந்து, சீழ், சளி,
வியர்வை ஆகியவற்றிலும் உற்பத்தியாகும்.
கிருமிகளால் உண்டாகும்
நோய்க்குறி குணங்கள்
குடலில் உண்டாகும் கிருமிகளினால் உடல்
நிலை பாதிக்கப்பட்டு, அதன் விளைவாக
நோய்க்குரிய குணங்கள்
புறத்தே தோன்றுமாறு குணங்களை
ஏற்படுத்தும். அவை, உடல் நிறம் மாறும்.
சுரம், வயிற்றுவலி, மார்பு நோய்,
வெளுப்பு நோய், ஊதல் நோய், இருமல்,
வாந்தி, சயநோய், அருசி, அசீரணம், பேதி,
வாய் நீரூறல், பிரேமை, சூலை, தொப்புள்
சுற்றி வலி, வயிறு உப்பல், தூக்கத்தில்
பல் கடித்தல், மாலைக்கண்,
குழந்தைகளுக்குத் தெற்கத்திக் கணை,
குழந்தை இசிவு, மூக்கில் புண் ஆகிய
குணங்களை விளைவிக்கும்.
குடற் கிருமிகளினால் கிராணி,
பவுத்திரம், மூலம், மலக்கட்டு, தேகக்
காங்கை, சுரம், மயிர் உதிர்தல், குட்டம்,
சொறி சிரங்கு, படை, கரப்பான் முதலிய
நோய்களை உண்டாக்கும் என்று,
கிருமிகளினால் உண்டாகக் கூடிய உடல்
பாதிப்பு விரித்துரைக்கப்படுகிறது.
கிருமிகள் உருவாகக் காரணம்
கரப்பான், கிராணி, பவுத்திரம், மூலம்,
மலக்கட்டு, தேகக் காங்கை முதலிய நோய்கள்
உண்டாகும் வழிகளை ஆராய்ந்தால், அவை,
உடலின் சூட்டினாலேயே உருவானவை எனத்
தெரியும்.அதிகமான உடலுறவின்
காரணத்தினால் உடல் சூடுண்டாகி,
அச்சூடு கொழுப்பு, தசை யாவற்றையும்
தாக்கி, கிருமிகளை உண்டாக்கும்.
அக்கிருமிகள் உடலைத் துளைத்துக்
கொண்டு எங்கும் பரவி விஷ கரப்பான்
என்னும் நோயை உண்டாக்கித்
தினவை விளைவிக்கும்.
அதே மாதிரியான உடற்சூடு மலத்தைத்
தீய்த்து, கட்டுண்டாக்கித்
துர்நாற்றமுண்டாக்கும். மலம்அழுகிக்
கிருமிகளை உண்டாக்கும்.
அவை குடலுக்குள், உண்ணும்
உணவை உண்டு வளர்ந்து குட்டம்,
வெடிப்புண்,சொறி, கரப்பான், கிராணி,
பவுத்திரம், சுக்கிலப் பிரமேகம் போன்ற
நோய்களை உருவாக்கும். மேலும்
குடற்புழுக்களால் மலத்துவாரத்தில்
இரத்தம், சீழ், நீர்க் கசிவு, முளைமூலம்,
வயிறு பொருமல், வாய்வு, புழுக்கடி,
சோகை, குன்மம், சயநோய், மலடு,
பெருவயிறு, சுக்கில நட்டம், உடல்
தடிப்பு போன்ற நோய்களும் உண்டாகும்.
நோய்க் கிருமிகளால் உடலுக்கு நேரக்
கூடிய விளைவுகளை விவரித்துள்ளது,
நோய் வரும் வழிகளை யெல்லாம்
கண்டறிந்ததின் விளைவாகவே எனலாம்.
எவையெவை நோயைத் தரவும், உண்டாக்கவும்
வல்லவை என்பதை உணர்ந்து உணர்த்தினால்
மட்டுமே நோயிலிருந்து விலகவும்,
நோயிலிருந்து உடலைப் பாதுகாத்துக்
கொள்ளவும் இயலும் என்பதை அறிந்தே சித்த
மருத்துவத்தின் செயல்பாடுகள்
அமைந்திருக்கின்றன எனல் பொருந்தும்.
கண் நோய் :
கண் மருத்துவம் என்பது இன்றைய காலத்தில்
சிறந்த இடத்தைப் பிடிப்பதைப் போலவே,
தமிழ் மருத்துவ நூலாரும் கண்
மருத்துவத்தைச் சிறந்த மருத்துவமாக
வளர்த்தனர் எனலாம்.
பொதுக் காரணங்கள் :
வேகங்களின் வழியே உண்டாகும்
தீவினையாகிய நோய்களையும், வெம்மையால்
உண்டாகும் எரிச்சலையும், புவன
போகங்களின் மேல் கொண்ட பெருத்த ஆர்வத்தால்
உண்டான பற்பல நோய்களும், அதனால்
மெய்யிலும், உள்ளத்திலும் ஏற்படும்
தளர்ச்சிகளும், உலக
வாழ்க்கை என்று கூறப்படும்
இருநூறு துக்க சாகரங்களும் கண்நோய்
உண்டாவதற்கான பொதுக் காரணங்கள் என்றும்,
மனிதன்
பிறந்தபோதே உடன்தோன்றி வருத்துகின்ற
வேகம் என்னும் பதினான்கு நோய்களும்
குறிப்பால் உணர்த்தப் பட்டுள்ளன. அவை :
சுவாசம், விக்கல், தும்மல், இருமல்,
கொட்டாவி, பசி, தாகம், சிறுநீர், மலம்,
இளைப்பு, கண்ணீர், விந்து, தூக்கம்,
கீழ்நோக்கிச் செல்லும் வாயு (அபான
வாயு என்பர் சிலர்). பொதுவாக ஆராய்ந்தால்
மேற்கண்ட பதினான்கும் உடலில் தோன்றும்
எல்லா நோய்களுக்கும் அடிப்படையாக உள்ளன
என்பது தெளிவாகும். அவை இல்லா மனிதன்
தேவனெனப் படுவான்.
சிறப்புக் காரணம் :
சிசுவானது தாயின் கர்ப்பத்தில்
இருக்கும் போது, தாயின் வயிற்றில்
கிருமிகள் சேர்ந்திருந்தாலும்,
தாயானவள் பசியால் வருந்தினாலும்,
தாயானவள் திகிலடைந்தாலும், மாங்காய்,
மாம்பழம் இவற்றை விரும்பித் தின்றாலும்
சிசு பிறந்தவுடன் சிசுவின் கண்களில்
நோய்கள் உண்டாகும்.
காசநோய் :
கண்ணில் உண்டாகும் காசநோய், நீலகாசம்,
பித்தகாசம், வாதகாசம், வாலகாசம்,
மந்தாரகாசம், ஐயகாசம், வலியுங்காசம்,
விரணகாசம் என எட்டாகும்.
வெள்ளெழுத்து
கண்பார்வை மயக்கம் என்று கூறப்படும்
‘திமிரம்’ ஏழாகும். அவை வெள்ளெழுத்து,
மந்தாரம், மூளை வரட்சி, பித்தம், சேற்பம்,
நீர் வாயு, மேகம்
என்பன.முப்பத்தேழு வயது வரை கண்
பார்வை தெளிவாகத் தீங்கின்றி இருக்கும்.
நாற்பத்தைந்தில்
கண்பார்வை சற்று இயற்கைக்கு ஒதுங்கியும்,
தெளிவின்றி சற்றுப் புகைச்சலாய்த்
தோன்றும். ஐம்பத்தேழாம்
வயதிலிருந்து சிறிது சிறிதாகக்
கண்பார்வை இருளத் தொடங்கும்.
கண்பார்வை அறவே நீங்கி இருண்டிடும்
நூறாமாண்டில். கூர்மையான
பார்வை தரத்தக்க கருவிழியில் அடர்ந்த
புகை கப்பியது போலவும், மேகக் கூட்டம்
போலவும், பார்வை தடைப்பட்டு, நேராய்க்
காணத்தக்க பொருள் சற்று ஒதுங்கிக்
காணப்பட்டாலும், பொருள்கள்
சற்று மஞ்சளாகவும்
நேர்ப்பார்வை சற்று தப்பியும் காணும்.
இத்தகைய குறிகள் கண்ணில் தோன்றினால்
அதனை வெள்ளெழுத்து (திமிரம்)
என்று அறியவும்.
கண்பார்வை வயது ஏறயேறக் குறைவதின்
விவரத்தைக் குறிப்பதுடன், பார்வைத் திறன்
ஒடுங்குவது இயற்கை என்பதையும்
இக்கருத்து விவரிக்கிறது.
கண்ணின் நோய்களைக் குறிப்பிட்டு அதன்
தோற்றத்தையும் வண்ணத்தையும்
குறிப்பிட்டுக்
காட்டியிருப்பது மருத்துவ நூலாரின்
ஆழ்ந்த மருத்துவப் புலமை நன்கு விளங்கக்
கூடியதாக இருக்கிற தெனலாம்.
தலைநோய் :
உடம்பு எண் சாண் அளவு, அவ்வுடம்பில்
உண்டாகும் நோய்கள் 4448, அவற்றில்
தலையில் தோன்றும் நோய்கள் 1008
என்று குறிப்பிடுவர்.
ஒவ்வொரு உறுப்பிலும் உண்டாகும் நோய்கள்
என்று குறிப்பிடும் அங்காதி பாதம்,
தலையின் உறுப்புகளாகக் கொண்ட கபாலம்
வாய், மூக்கு, காது, கண், பிடரி, கன்னம்,
கண்டம் ஆகிய எட்டுப் பகுதிகளில் வரும்
நோய்கள் மொத்தம் 552 என்கிறது. ஆனால்,
தலை நோயைக் குறிப்பிடும் நாகமுனிவர்
1008 என்கிறார். இதனால் நாக முனிவர்
தலைநோய் மருத்துவத்தில் கொண்டிருந்த
ஆழ்ந்த ஈடுபாடும், ஆய்வும் புலப்படும்.
மேலும், அம்முனிவர்
எண்ணூற்று நாற்பத்தேழு நோய்களைத்
தன்னுடைய அனுபவத்தினால் உணர்ந்ததாகக்
கூறுவதும் குறிப்பிடத்தக்கது.
தலை உறுப்புகளில் உண்டாகும் நோய்களின்
எண்ணிக்கை
ஒவ்வொரு உறுப்பிலும் எத்தனை நோய்கள்
உண்டாகும் என்ற குறிப்பினைத்
தருகின்றபோது, தலையின் உச்சியில்
நாற்பத்தாறு மூளையில் (அமிர்த்தத்தில்)
பதினாறு, காதில் நூறு, நாசியில்
எண்பத்தாறு, அலகில் முப்பத்தாறு,
கன்னத்தில் நாற்பத் தொன்பது, ஈறில்
முப்பத்தேழு, பல்லில் நாற்பத்தைந்து,
நாக்கில் முப்பது நான்கு, உண்ணாக்கில்
இருபது, இதழில் பதினாறு,நெற்றியில்
இருபத்தாறு, கண்டத்தில் நூறு,
பிடரியில் எண்பத் தெட்டு,புருவத்தில்
பதினாறு, கழுத்தில் முப்பத்தாறு, என,
தாம் அனுபவத்தினால் உணர்ந்தவற்றை மட்டும்
குறிப்பிடு கின்றார். ஆனால், எந்த
முறையைக் கொண்டு 1008 என்ற எண்ணின்
தொகையைக் கூறினார் என்பது குறிப்பிடப்
படவில்லை.
கபால நோயின் வகை :
வாதம் முதலாகக் கொண்ட
முக்குற்றங்களினால் வரும் நோய்கள்10,
கபாலத் தேரை1, கபாலக் கரப்பான் 6,
கபாலக் குட்டம் 5, கபாலப் பிளவை 10,
கபாலத் திமிர்ப்பு2, கபாலக் கிருமி2,
கபாலக் கணப்பு3, கபால வலி1, கபாலக்
குத்து1, கபால வறட்சி1, கபால சூலை3,
கபால தோடம்1 ஆக 46–ம் உச்சியில்
தோன்றும் வகையாகக் குறிப்பிடுவர்.
தலையில் தோன்றும் நோய்களில் கண், காது,
தொண்டை, மூக்கு, ஆகியவையும் அடங்கும்.
தற்காலத்தில் கண் மருத்துவம் எனத்
தனியாகவும், காது, தொண்டை,
மூக்கு ஆகியவை தனியாகவும்,
மூளை மருத்துவம் தனியாகவும்–
சிறப்பு மருத்துவமாகவும் கொள்ளப்
படுகின்றன. ஆனால் சித்த மருத்தவம்
அனைத்தையும் ஒன்றுடன்
ஒன்று தொடர்புடையவை என்பதால்
தனித்தனியே கருதாமல்
ஒன்றாகவே கருதியிருக்கக் கூடும்.
அறிவியல் வளர்ச்சி என்பது தலைக்காட்டாத
காலத்திலேயே அறிவியல்
முறைக்கு உகந்ததாகச் சித்த
மருத்துவத்தை வளர்த்தனர். மூளையில்
உருவாகும் குற்றங்களைக்
கண்டறிந்து அவை பதினாறு வகை நோயென
உரைத்திருப்பது கருதுதற்குரியதாகும்.
அம்மை நோய் :
அம்மை நோய் என்னும் இந்நோயை வைசூரி நோய்
என்று சித்த மருத்துவம்
குறிப்பிடுகிறது. இந்நோய் வருவதற்குக்
காரணமாக அமைவது வெப்பமாம்.
இதனை வெக்கை நோய் என்றும் குறிப்பிடக்
காணலாம்.மேலும், அம்மை நோய்க்குக்
குரு நோய், போடகம் என்னும் பெயர்களும்
வழங்கப்படுகின்றன.அம்மைநோய், உடலில்
ஏற்படுகின்ற அழலின் காரணத்தினால்
உடலில் சூடு உண்டாகி,
மூளை கொதிப்படைந்து, எலும்பைத்
துளைத்துக்
கொண்டு உண்டாகின்றது என்று மருத்துவ
நூல் குறிப்பிடுகிறது.
இந்திய மருத்துவ வரலாற்றில்
பெரும்பாதிப்பை உருவாக்கியது
பெரியம்மை என்னும் வைசூரி நோய். இந்நோய்
உயிர்க்கொல்லி நோயாக
இருந்தது.அம்மை நோயால் கண்கள்
பாதிப்படையும். தோலில் பள்ளங் களைக்
கொண்ட புள்ளிகளை ஏற்படுத்தும்.
அப்புள்ளிகள் என்றும் மாறாமல்
இருப்பதுண்டு.
சித்த மருத்துவம் கண்டறிந்த அம்மை நோய்கள்
பதினான்கு. அவை,
1. பனை முகரி 2. பாலம்மை
3. மிளகம்மை 4. வரகுதரியம்மை
5. கல்லுதரியம்மை 6. உப்புதரியம்மை
7. கடுகம்மை 8. கடும்பனிச்சையம்மை
9. வெந்தயவம்மை 10. பாசிப்பயறம்மை
11. கொள்ளம்மை 12. விச்சிரிப்பு அம்மை
13. நீர்கொள்ளுவன் அம்மை 14. தவளை அம்மை
என்பனவாகும். இந்நோய்ப் பெயர்கள் அனைத்தும்
அம்மைப் புள்ளிகள் தோன்றுவதைக் கொண்டும்,
அம்மை நோயுற்றவரின் செயலைக் கொண்டும்
காரணப் பெயரால் சுட்டப்படுகின்றன.
இந்நோய் பெரும்பாலும்
குழந்தைகளுக்கு வரும்
நோயாகவே கருதப்படும். அதுவும் கோடைக்
காலமான வேனிற் காலத்திலேயே வரும்.
தகவல் உதவி :தமிழும் சித்தர்களும்

No comments:

Post a Comment