சிந்திக்க...
எவரேனும் திட்டிவிட்டால்
உடனே சோகமாகி விடுவதும்,
எல்லா வேலைகளையும்
அப்படி அப்படியே போட்டுவிட்டுச்
சோம்பி விடுவதும், முடிந்தால் ஏகமாக
அழுவதும், இப்படி அநியாயமாகத்
திட்டி விட்டார்களே என்று பொருமுவதும்
நம்மில் பலரது இயல்பாய்
இருந்து வருகிறது. ஒருவர்
திட்டி விட்டால் அதைப் பற்றிக் கொஞ்ச
நேரம் சிந்தித்து விட்டு அப்புறம்
மறந்து விட்டு அடுத்த வேலையைப் பார்க்கக்
கற்றுக் கொள்வது அவசியம்.
ஒருவர் திட்டினால் நாம் தவறாக
நடந்து கொண்டோமா என
நம்மை நாமே மனசாட்சியின் துணையுடன்
சிந்திக்க வேண்டும். ஆம் என்றால் அவர்
திட்டியது சரிதான் என
நம்மை நாமே சமாதானம் செய்து கொள்ள
வேண்டும். இல்லையென்றால்
அது உண்மை இல்லாத போது நாம் ஏன் அதைப்
பற்றிக் கவலைப் பட வேண்டும்
என்று சமாதானம் செய்து கொள்ள வேண்டும்.
முன்பின் தெரியாத ஒருவர் திட்டினால் நம்
அருமை தெரியாதவர் என அதைப்
புறக்கணிக்க வேண்டும். மிக வேண்டியவர்
திட்டினால் அதன் பின்னே மறைந்திருக்கும்
அக்கறையை பெரிது படுத்திப் பார்க்க
வேண்டும். தவிர திட்டிய பாணியையும்,
திட்டப்பயன் படுத்திய வார்த்தைகளையும்
பெரிது படுத்திக் கொண்டிருக்கக்
கூடாது.
தெரிந்தவர்கள் திட்டினால்
பதிலுக்கு மல்லுக்கு நிற்கக் கூடாது.
நடந்த சம்பவத்தைப்
பற்றி தண்டோரா போட்டு திட்டியவன்
காதுக்கு வேறு விதமாகச் செய்தி போய்
விடக் கூடாது. திட்டியவர்
தணிந்து வருவார்.அப்போது நம்
பக்கத்து நியாயம் எடுத்துச் சொல்லப்பட
வேண்டும்.
இந்த முறையைக் கையாண்டால் நம்
மீது அவர்களுக்கு அன்பு வளர நாம்
வழி வகுத்து விட்டோம் என்று பொருள்.
No comments:
Post a Comment