Saturday, 21 June 2014

டீல்களின் தடைக்கற்கள்...

டீல்களின் தடைக்கற்கள்...

உங்களுக்கும் இன்னொருவருக்கும் சின்ன பிரச்சினை.
பேசி முடிக்கச் சந்திக்கிறீர்கள்.
பேச்சு ஆரம்பிக்கிறது. திடீரென, காரணம்
புரியாமல் இரு தரப்பிலும் வார்த்தைகள்
தடிக்கின்றன. பேச்சு விவாதமாகிறது,
சண்டையாகிறது. உரசல்கள் விரிசல்களாகின்றன.
ஏழு விதமான காரணங்களால், இவை ஏற்படலாம்
என்று மனோதத்துவ மேதைகள் சொல்கிறார்கள். அந்தத்
தடைக்கற்கள் இவைதாம்:

1. எல்லைத் தடைகள் (Physical Barriers)
சுமார் ஐம்பது ஆண்டுகளுக்கு முன் நாம் கூட்டுக்
குடும்பங்களாக வாழ்ந்து கொண்டிருந்தோம். வீட்டில்
10, 15 பேர் வாழும் இடத்தை, தூங்கும் இடத்தைப்
பகிர்ந்துகொள்ள வேண்டிய நிர்ப்பந்தம்,
ரகசியங்களைப் பகிர்ந்துகொள்ளும்
கட்டாயத்தை ஏற்படுத்தியது. ஒருவருக்கு ஒருவர்
விட்டுக் கொடுக்கும் குணம்
குழந்தைகளுக்கு இயற்கையாக வந்தது.
இன்று கூட்டுக் குடும்பங்கள் உடைந்துவிட்டன.
குழந்தைகளுக்குத் தனி அறைகள் தருகிறோம்.
தனி அறையின் கதவு வெறும் கதவு அல்ல, உறவைப்
பிரிக்கும் இடைவெளி.
அலுவலகங்களிலும், உயர் அதிகாரிகள்
தனி அறைகளில் அமர்ந்திருப்பார்கள். அவர்கள் கீழ்
பணியாற்றும் ஊழியர்கள் ஒரு பெரிய ஹாலில்
உட்கார்ந்திருப்பார்கள். இருவரும் சமமாகப் பழக
முடியாது என்று அறிவிக்கும் நிர்வாகத்தின்
மொழி இது. இந்த அடிப்படையில்,
பேச்சு வார்த்தைகளின்போது, ஒருவரை ஒருவர்
நேரடியாகப் பார்க்கும்படியாக இருக்கைகளைப்
போடவேண்டும்.

2. கண்ணோட்டத் தடைகள் (Perceptual
Barriers)
பழைய எம். ஜி. ஆர் சினிமாக்களை மனதுக்குக்
கொண்டு வாருங்கள்.
ஹீரோ அரும்பு மீசை வைத்திருப்பார், கண்களில்
கனிவு இருக்கும். வில்லன் நம்பியாருக்குப் பெரிய
மீசை, உருட்டும் விழிகள். நம்பியார் நிஜத்தில்
மிக நல்ல மனிதர், கெட்ட பழக்கங்கள் இல்லாதவர்.
ஆனால், நம்பியாரைப் பார்த்தவுடன் வில்லன்
நினைவுதான் நமக்கு வரும். நம்பியார் மாதிரித்
தோற்றம் கொண்டவரைப் பேச்சு வார்த்தைகளில்
சந்திக்கிறீர்கள். அவர் வில்லனாக
இருக்கலாமோ என்கிற சந்தேகத்தோடுதான்
அவரோடு பேசத் தொடங்குவோம். தொடரும்
அனுபவங்கள் அவர் நல்லவர்
என்று நிரூபிக்கும்வரை இந்தத் தடைகள் தொடரும்.

3. உணர்ச்சித் தடைகள் (Emotional
Barriers)
என் நண்பன் நாகராஜனுக்கு இரண்டு முகங்கள் உண்டு.
நண்பர்களுக்காக உயிரையே கொடுப்பான். ஆனால், தன்
உரிமைகள் பாதிக்கப்படுகிறது என்று நினைத்தால்,
நட்பு அவனுக்கு இரண்டாம் பட்சம்தான்.
அவர்களுக்கு எதிராகக் கொடி தூக்கத்
தயங்கமாட்டான். உயர்
அதிகாரிகளோடு சண்டை போடுவது, சட்ட
திட்டங்களை எதிர்ப்பது என அவனுக்குப்
போராளி குணம்.
நாகராஜனின் அப்பா நாராயணன் சார் பள்ளிக்கூடத்தில்
எங்கள் கணக்கு வாத்தியார். அவன் தவறு செய்வதாக
அவர் நினைத்தபோதெல்லாம், அவனுக்குத்
தண்டனை கொடுத்தார். பேச்சுவார்த்தைகளின்போது,
ஒருவருடைய பழகும் முறையோ, உடல் மொழியோ,
நாராயணன் சாரை நினைவுபடுத்தினால், நாகராஜனின்
ஆழ்மனதுக்குள் தூங்கும்
போராளி விழித்துக்கொள்வான். திடீரென நாகராஜனின்
அணுகுமுறை மாறுவது, தன் அப்பாவைப் பற்றிய
உணர்வு கலந்த நினைவுகளால், என்பது எதிர்த்
தரப்புக்கு எப்படித் தெரியும்?

4. மொழித் தடைகள் (Language
Barriers)
பேசுவதற்கு மொழி அத்தியாவசியம். அந்நிய
மொழி மட்டுமல்ல, நம் மண்ணிலேயே, நம்
தாய்மொழியிலேயே ஒருவரை ஒருவர் புரிந்துகொள்ள
எத்தனை சிரமங்கள்?
கன்னியாகுமரி மாவட்டத்தில் பேசப்படும்
ஒரு வாக்கியத்தை எடுத்துக்கொள்வோம்.
“ லே மக்கா, இப்பம் சோலியா இருக்கேன்.
பொறவு வா.“
புரியவில்லையா? வார்த்தை வார்த்தையாகப்
பார்ப்போம்.
லே - பொருள் கிடையாது. வெறும் விளிச் சொல்
மக்கா - மகனே
இப்பம் - இப்பொழுது
சோலியா - ஜோலியாக / வேலையாக
பொறவு - பிறகு
அதாவது, “ லே மக்கா, இப்பம் சோலியா இருக்கேன்.
பொறவு வா“ என்றால்,
“ மகனே, இப்பொழுது வேலையாக இருக்கிறேன்.
பிறகு வா“ என்று அர்த்தம்.
குமரி மாவட்டத்தில் பேசும் வட்டார
மொழி மதுரையில், திருச்சியில், சேலத்தில்,
கோவையில், சென்னையில் புரிவதில்லை.
இந்தியாவில் 452 மொழிகளும் 2000 - க்கும்
அதிகமான வட்டார மொழிகளும் இருக்கின்றன. உலக
அளவில் 6912 மொழிகள் உள்ளன. ஒருவரை ஒருவர்
புரிந்து கொள்ளுதலின் அடிப்படையே மொழிதான்.
மொழி பெயர்ப்பவர் எத்தனைதான் வல்லுநராக
இருந்தாலும், வீரியம் குறையாமல் நம்
கருத்துகளை அவர் எடுத்துவைக்க முடியுமா?

5. கலாசாரத் தடைகள் (Cultural
Barriers)
தில்லியில் ராக்கேஷ் ஷர்மா காகிதம் தயாரிக்கும்
எந்திரங்கள் தயாரிக்கிறார். கம்பெனி பெயர்
ஸ்வஸ்திக் இண்டஸ்ட்ரீஸ். ஒரு இஸ்ரேல் நாட்டுக்
கம்பெனியின் தொழில் நுட்ப உதவியோடு,
நிறுவனத்தை மேம்படுத்த விரும்பினார். அனில்
கபூர் என்ற நிர்வாக ஆலோசகரை அணுகினார். அவர்
கொடுத்த முதல் அட்வைஸ், “உங்கள்
கம்பெனி பெயரை மாற்றுங்கள்.“
அனில் கபூர் சொன்ன காரணம், “ இஸ்ரேல் நாட்டு மக்கள்
யூதர்கள். ஜெர்மனியில் ஹிட்லர் ஆட்சியில் லட்சக்
கணக்கான யூதர்கள் சித்திரவதை செய்யப்பட்டார்கள்.
ஹிட்லருடைய நாஜிக் கட்சியின் சின்னம் ஸ்வஸ்திகா.
பெயரிலும், வடிவத்திலும், நம் ஸ்வஸ்திக்
அவர்களுக்கு ஸ்வஸ்திக்காவை நினைவூட்டும். இந்த டீல்
நடக்காது.“
பாரம்பரிய பிஸினஸ்களில் மட்டுமல்ல, தொழில்நுட்பத்
துறைகளிலும் இந்தச் சிக்கல்கள் உண்டு. நம்
சாஃப்ட்வேர் கம்பெனிகளுக்கு அமெரிக்க
நிறுவனங்கள் ப்ராஜெக்ட்கள் தருகிறார்கள். என்
அமெரிக்க நண்பர் ராபர்ட் சொன்னார், ”இந்திய
கம்பெனிகளோடு பேசும்போது ஒரு முக்கிய
பிரச்சனை. ஒருவர் பேசிக்கொண்டிருக்கும்போது,
இன்னொருவர் குறுக்கிட்டுப்
பேசக்கூடாது என்பது எங்கள் பழக்கம். இந்தியர்கள்
இதைப் பின்பற்றுவதேயில்லை.”
பிற நாட்டுக்காரர்கள் அல்லது பிற கலாச்சாரங்களைச்
சேர்ந்தவர்களோடு பேச்சு வார்த்தைகளில்
ஈடுபடப்போகிறீர்களா? அவர்களின் பண்பாடுகள்,
பழக்க வழக்கங்கள் பற்றித் தெர்ந்துகொள்ளுங்கள். எந்த
விதத்திலும் இந்த உணர்வுகள் காயப்படாமல்
கவனமாகப் பார்த்துக்கொள்ளுங்கள்.

6. ஆண் - பெண் குணநலத் தடைகள் (Gender
Barriers)
ஆண்களும் பெண்களும் அறிவிலும், திறமையிலும்
சரி நிகர் சமமானவர்கள்தாம். ஆனால், அவர்களுடைய
மனப்பாங்குகள்
அடியோடு மாறுபட்டவை என்று மனோதத்துவ
ஆராய்ச்சிகள் கூறுகின்றன. உதாரணமாக,
ஆண்கள் விரும்புபவை, மதிப்பவை - அதிகாரம்,
பதவி, திறமை, வெற்றிகள்: பெண்கள்
விரும்புபவை அன்பு, பழகுதல், அழகு, உறவுகள்.
பிரச்சினைகள் வரும்போது, மன உளைச்சல்
ஏற்படும்போது, ஆண்கள்
தனிமையை விரும்புகிறார்கள். தாங்களே தீர்வுகள்
காண ஆசைப்படுகிறார்கள். தேவைப்பட்டால்
மட்டுமே பிறரோடு ( மனைவியோடு) அவற்றைப்
பகிர்ந்துகொண்டு தீர்வுகள்
குறித்து ஆலோசனை கேட்கிறார்கள். பெண்கள்
பிரச்சினைகள், மன உளைச்சல் குறித்துப்
பிறரோடு (கணவரோடு ) பேச
விரும்புகிறார்கள். கணவர்கள் தங்கள் பேச்சைக்
கேட்காவிட்டால், மனம் உடைந்து போகிறார்கள்.
ஆட்சியில், நிர்வாகத்தில், கார்ப்பரேட் உலகத்தில்
பெண்கள் நுழைவு அதிகமாகிவருகிறது.
பேச்சு வார்த்தைகளிலும் அவர்கள் அதிகமாகப்
பங்கேற்கிறார்கள். எனவே, ஆண்களும் பெண்களும்,
பிரச்சினையைத் தங்கள் கண்ணோட்டத்தில்
மட்டுமே பார்க்காமல், ஆண்-பெண் குணநலத்
தடைகளையும் மனதில் எடுத்துக்கொள்ள வேண்டும்.

7. பழகும் முறைத் தடைகள்
(Interpersonal Barriers)
நாம் ஒவ்வொருவரும் குணநலன்களால் மாறுபட்டவர்கள்,
சிலர் ஒருவரைச் சந்திக்கும்போது,
தயக்கமே இல்லாமல் அவர்களோடு பேசுவார்கள்,
நெருங்கிப் பழகுவார்கள். சிலர் புதியவர்களிடம்
பேச மாட்டார்கள், எளிதில் மனம் திறக்கமாட்டார்கள்.
சாதாரணமாக, முதல் தரப்பினரோடு பேச, பழக நாம்
விரும்புகிறோம். அடுத்த தரப்பினரைத்
தவிர்க்கிறோம். இந்த முன் அனுமானங்கள் கருத்துப்
பரிமாற்றத்துக்குத் தடைகளாகிவிடுகின்றன.
பேச்சு வார்த்தைகளுக்குப் போகிறோம். அவர்கள்
கலகலப்பாகப் பழகாவிட்டால், நம்
கருத்துகளை எடுத்துவைக்கத் தயங்குகிறோம்.
பேச்சு முன்னேறுவதேயில்லை, டீல்கள்
முடிவதேயில்லை. ஒவ்வொருவர் ஆளுமையும்
மாறுபடும், அவர்கள் பின்புலத்தால், குடும்பச்
சூழ்நிலையால், வளர்க்கப்பட்ட விதத்தால்
வித்தியாசப்படும் என்பதை உணர்ந்து, முன்
அனுமானங்கள் ஏதுமின்றி, திறந்த
மனத்தோடு அவர்களை அவர்களாகவே ஏற்றுக்கொள்ளுங்கள்.
புரிந்துகொண்டால், பயன்படுத்தத் தெரிந்துகொண்டால்,
இந்த ஏழு தடைக்கற்களும் டீல்களின் வெற்றிக்குப்
படிக்கற்கள்!

Monday, 16 June 2014

வயிற்று நோயும், தேனின் பயனும்:-

வயிற்று நோயும், தேனின் பயனும்:-

சித்த மருத்துவத்தில் தேனின் பயன்
இன்றியமையாதது. இயற்கை தந்த
வரப்பிரசாதத்தில் தேனும் ஒன்று. அதன்
பயன்கள் பல. உணவாகவும், மருந்தாகவும்
விளங்கும் தேனின் பயன்களைப் பார்ப்போம்....
* கடுமையான வயிற்று வலி உள்ளவர்கள்பின்வ
ருமாறு செய்ய வேண்டும். கொதிக்கும் சூடுள்ள
ஒரு கப் நீர் எடுத்து ஒரு டீ ஸ்பூன்
தேனை அதனுடன் கலந்து ஆற்ற வேண்டும்.
தாங்கக் கூடிய சூட்டுடன் அந்த நீரைக் கொஞ்சம்
கொஞ்சமாக அருந்த வேண்டும். அருந்தினால்
வயிற்றுவலி உடனே நின்று விடும். ஜீரணக்
கோளாறுகளும் குணமாகும்.
* வயிற்றில், குடலில் புண் இருக்கிறதா?
உணவு உண்பதற்கு இரண்டுமணி நேரத்திற்கு முன்பு இரண்டு டீ
ஸ்பூன் தேன் அருந்த வேண்டும். இப்படி பத்துத்
தினங்கள் அருந்த வேண்டும். பிறகு 10
தினங்கள் மேற்சொன்னாறு தேன் அருந்த
வேண்டும். குடற்புண்கள் ஆறி விடும்.
* வயிற்றில் எரிச்சல், வயிற்றில் இரைச்சல்
இருந்தால்,
உணவுக்கு ஒரு மணி நேரத்திற்கு முன் 1 டீ
ஸ்பூன் தேனை நீரில் கலந்து அருந்த வேண்டும்.
தொடர்ந்து சில நாட்களுக்கு அருந்தினால்
வயிற்றில் ஏற்படும் எரிச்சல், இரைச்சல்
ஆகியன குணமாகிவிடும்.
* இஞ்சியை சிறு சிறு துண்டுகளாக வெட்ட
வேண்டும். அத்துண்டுகளை ஒரு சட்டியில்
இட்டு அடுப்பில் வைத்து சிவக்க வறுக்க
வேண்டும். அதில் ஒரு கப் நீரையும் இரண்டு டீ
ஸ்பூன் தேனையும் கலந்து காய்ச்ச வேண்டும்.
சுண்டக் காய்ந்ததும் எடுத்து, வடிகட்டி அருந்த
வேண்டும். இப்படி இருவேளை அருந்தினால்
செரிமானம் ஆகாமையால் ஏற்பட்ட
பேதி நின்றுவிடும்.
* ஒரு டீ ஸ்பூன் மிளகைத் தூள்
செய்து மெல்லிய துணியில் சலித்துக்கொள்ள
வேண்டும். அதில் அரை டீ ஸ்பூன் தூள்
எடுத்து, அதனுடன் தேன் கலந்து உட்கொள்ள
வேண்டும். செரிமானக் கோளாறுகளால் ஏற்பட்ட
வயிற்று நோய் குணமாகும்.
* அகத்திக் கீரையைக்
காம்பு நீக்கி ஆய்ந்தெடுத்து ஆவியில் வேக
வைக்க வேண்டும். அதைப்
பிழிந்து சாறு எடுக்க வேண்டும். அந்தச்
சாற்றில் தேன் கலந்து அருந்தினால், எல்லாவித
வயிற்றுக் கோளாறுகளும் குணமாகும்.
* ஆலமரத்திலிருந்து பால் எடுக்க வேண்டும்.
அதில் ஒரு டீ ஸ்பூன் பால் எடுத்து, அதனுடன்
ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த வேண்டும்.
அருந்தினால் வயிற்றிலுள்ள புழுக்கள்
வெளியேறும். வயிற்றிலுள்ள புண்
குணமாகும்.
* குப்பைமேனிச் செடியின்
வேரை இடித்து இட்டுக் கஷாயமாக்க வேண்டும்.
அக்கஷாயத்தில் 30 மில்லி எடுத்து அதனுடன்
சிறிது தேன் கலந்து அருந்தினால்
வயிற்றிலுள்ள புழுக்கள் வெளியேறும்.
* பத்து கொன்றை மரப் பூக்களை 100
மில்லி பசும் பாலில் இட்டு காய்ச்ச வேண்டும்.
பூ நன்றாக வெந்ததும், வடிகட்ட வேண்டும்.
அதனுடன் ஒரு டீ ஸ்பூன் தேன் கலந்து அருந்த
வேண்டும். அதனால் வயிற்று கோளாறுகள்
வயிற்றுப்புண், குடற்புண் ஆகியன
குணமாகும்.
* சீதள பேதியை குணப்படுத்த 100
மில்லி ஆட்டுப் பாலை ஒரு டீ ஸ்பூன் தேன்
கலந்து அருந்த வேண்டும்.
ஒரு டம்ளர் வெந்நீரில் ஒரு டீஸ்பூன் தேன்
கலந்து, பின்பு அதில் அரை எலுமிச்சம்பழச்
சாற்றையும் சேர்த்துச் சாப்பிட்டு வந்தால் உடல்
எப்பொழுதும் சுறுசுறுப்பாக இருக்கும்.
நுரையீரலில் சேர்ந்துள்ள சளி எல்லாம் கண்
காணாத இடத்திற்கு ஓடிவிடும். குடல் மற்றும்
வயிற்றுக் கோளாறுகள் நீங்கிவிடும்.
குளிர்ச்சியால் ஏற்படும்
எல்லா வியாதிகளையும் உடல்
எதிர்த்து நின்று தடுத்துவிடும். இதய
பாதிப்புகள் நீங்கி இதயம் பலம் பெறும். புதிய
இரத்தம் உடம்பில் பாய்ந்தோடும்.
அதிகாலையிலும், படுக்கச்
செல்வதற்கு முன்பும் பருகவேண்டும்.
நெல்லிக்காய்களைத் துண்டு துண்டாக்கி தேன்,
ஏலக்காய், ரோஜா இதழ்கள்
சேர்த்து இரண்டு நாட்கள் வெயிலில் காய
வைக்கவேண்டும். பின்பு ஒரு ஸ்பூன் வீதம்
காலையும், மாலையும் சாப்பிட்டு வந்தால்
வறட்டு இருமல் குணமாகிவிடும். என்றும்
இளமையுடன் இருக்க வேண்டுமென
விரும்புவோர் தினமும்
தேனை அருந்தவேண்டும். நாற்பது வயதைக்
கடந்தவர்கள் கண்டிப்பாகத் தினமும்
தேனை அருந்திவர வேண்டும்.
சிறந்த மருத்துவரும், மாபெரும்
சிந்தனையாளருமான ஹிப்போ கிரேட்ஸ் 107
வயது வரை நோய் நொடியின்றி,
திடகாத்திரமாக புலன்கள் பலம் நிறைந்தவராக
வாழ்ந்தார். இதற்குக் காரணம் தேன்தான்.
"ஒவ்வொரு நேரமும்,
உணவு உண்ணும்போது தேனையும்
சேர்த்து உண்டு வந்தேன்" என்று கூறினார் அவர்.
நாம் உண்ணும் உணவுகள் இரைப்பையில்
சென்று சேருகிறது. அங்கு ஜீரண
உறுப்புகளெல்லாம்
ஒன்று சேர்ந்து உணவை ஜீரணித்து பலவித
சத்துக்களைத் தனித்தனியாகப் பிரித்து,
பின்பு உடல் முழுவதும் அனுப்புகின்றன.
இந்தப் பணியினை இரைப்பை மிகச் சிறப்பாகச்
செய்கிறது. இந்த இரைப்பையின் பணி சீராக
நடப்பதற்கு தேன் மிகவும் உதவுகிறது. ஜீரணச்
சத்து குறைந்திருந்தால் ஒரு டம்ளர் பாலில்
ஒரு ஸ்பூன் தேன் கலந்து சாப்பிட்டால் ஜீரண
உறுப்புகள் பலம் பெற்றுவிடும். இரைப்பையின்
பணி கெட்டுவிட்டால் உடம்பு அவ்வளவுதான்.
ஒரு ஸ்பூன் தேனைச் சாப்பிட்டு வந்தால்
அரை மணி நேரத்தில் நரம்புகள்
சுறுசுறுப்புடன் திகழும். சிலருக்குக் கை,
கால்கள், விரல்கள் மற்றும் உடல் நடுங்க
ஆரம்பிக்கும். இவர்கள் தினமும் ஒரு டம்ளர்
பாலில் ஒரு ஸ்பூன் தேன்
கலந்து சாப்பிட்டு வந்தால் நிச்சயம் குணம்
காண்பார்கள்.
மூட்டு வலிகளுக்குச் சிறந்த மருந்து தேன்தான்.
வலி உள்ள இடத்தில் நன்றாகத் தேனைத்
தேய்த்துவிட வேண்டும். அத்துடன்
எப்பொழுது உணவு உட்கொண்டாலும்
ஒரு ஸ்பூன் தேனையும் உடனே உட்கொள்ள
வேண்டும். மூட்டுகள் தேயாது, மூட்டுகள்
வலிக்காது.
படுக்கையே கதியாகக் கொண்டிருக்கும்
பிணியாளர்கள், பாலில் கொஞ்சம் தேன்
கலந்து தவறாமல் குடித்து வந்தால், விரைவில்
தெம்பு ஏற்பட்டு சுறுசுறுப்புடன் செயல்படத்
தொடங்கிவிடுவார்கள் கொம்புத்தேன்,
மலைத்தேன், குறிஞ்சித்தேன் என்று தேனில்
அறுபது வகை உண்டு. ஒவ்வொரு வகைத்
தேனுக்கும் ஒவ்வொரு சிறப்பு குணம் உண்டு.
ஆஸ்துமா, அலர்ஜி தொல்லைகளிலிருந்
து விடுபட தினமும் தேனைப்
பருகி வரவேண்டும். 120 கிலோ எடையுள்ள
ஆல்பிரட், ஆஸ்திரேலியா நாட்டின் தலைசிறந்த
ஓவியர். உடலின் எடையைக் குறைப்பதற்கு இவர்
உண்ணாத மருந்துகளில்லை. பார்க்காத
வைத்தியமில்லை. ஆனாலும், உடல்
எடை குறைந்தபாடில்லை. பின்னர்,
தேனை உண்டு வந்தார். சில நாட்களில்
அவருடைய உடல் எடை குறைய
ஆரம்பித்துவிட்டது.
இத்தகைய சிறப்புள்ள தேன் கெட்டியாக,
தெளிவானதாக, வெளிறிய தங்கத்தை ஒத்த
நிறத்தில் இருக்கும்.
நமது உடலுக்கு கார்போஹைட்ரேட்
சக்திகளை அளித்து, நமக்குத் தேவையான
சக்தியைத் தருகிறது. பிற உணவுகளைப் போல்
வயிற்றில் தங்கிப் புளிக்கும் அபாயமோ,
ஜீரணக் கோளாறோ எல்லாம் இதில் இல்லை.
இதில் இரும்பு, தாமிரம், மாங்கனீசு,
பொட்டாசியம் போன்ற சத்துக்கள் உள்ளதால் நல்ல
இரத்த விருத்தி ஏற்படும்.
சோர்வுற்றநிலை, அதிக வேலை, பசியின்மை,
அதிக அமிலத்தன்மை, பித்தம் சம்பந்தமான
தொல்லைகள், இரத்தக்குழாய் தொடர்பான சில
தொல்லைகள், இருதயத் தசைகளுக்குப் போதுமான
இரத்தம் இன்மையால் ஏற்படும் வலி,
தொற்று நோய்க் கிருமிகளால் உண்டான காய்ச்சல்,
மூளைக்கு அதிக வேலை கொடுத்ததால் ஏற்பட்ட
சோர்வு, கர்ப்பிணிகளுக்கு ஏற்படும்
காலை நேரத் தொல்லைகள்,
ஹைபோகிளை சீமியா எனப்படும் இரத்தத்தில்
சர்க்கரைச் சத்து குறைந்த
நிலை போன்றவைகளுக்குத் தேன் மிகுந்த
பயனுள்ளது.
ஒரு மேசைக்கரண்டி தேனை இரவில்
படுக்கும்போது உண்டு. வந்தால்
அடிக்கடி சிறுநீர் கழிக்கும் நிலை மாறும்.
நரம்புத் தளர்ச்சிக்குத் தேனைவிடச் சிறந்த
மருந்து இல்லை. தேனை துளசிச் சாற்றில்
கலந்து உபயோகிப்பது சளி, தொண்டை வீக்கம்,
பிராங்டீஸ் எனப்படும் சுவாசத்
தொல்லை போன்றவைகளுக்கு மிகவும் நல்லது.
இதனைத் தவறாது உபயோகித்தால்
சக்தி அதிகரிக்கும். சோர்வு ஏற்பட்டாலும்
உடல் தாங்கும் தன்மை பெறும். உடல்
ஆரோக்கியத்திற்கு தேன் வழி வகுக்கும்
என்பதில் ஐயமில்லை.

தலைமுடி வளர...

தலைமுடி வளர...

பெண்களின் அழகில் முக்கிய
பங்கு வகிப்பது கூந்தல். கூந்தல் நீளமாக
அடர்த்தியாக இருந்தால் எப்படிப்பட்ட
பெண்ணும் அழகு தேவதைதான். ஆனால் என்ன
செய்வது அன்றைய நாட்களில் உள்ள
பெண்களை போன்று இன்றைய நவநாகரிக
நங்கைகளுக்கு கூந்தலை பராமரிக்க
போதிய நேரம் கிடைப்பதில்லை. அதன்
விளைவு பிளவுபட்ட அடர்த்தி குறைந்த
கூந்தல்.
அவற்றின் போது சக்திவாய்ந்த
இரசாயனங்களை தலைமுடிகளுக்கு பயன்படுத்துவதால்
கூந்தல் விரைவாக சேதமடைகிறது.
தலை முடி அடர்த்தி குறைவாக
இருக்கிறதே என இனி கவலைப்பட
தேவையில்லை. தலையில் முடி அடர்த்தியாக
வளர உங்களுக்கு சில குறிப்புக்கள்.....
*ஐந்து இதழ்கள் உள்ள
செம்பருத்தி பூவை அரைத்து நல்லெண்ணையில்
காய்ச்சி, வடிகட்டிய பின் தலைக்குத்
தேய்த்தால் தலை முடி அடர்த்தியாக
வளரும்.
*முடி செழித்து வளர வாரம்
ஒருமுறை வெண்ணெய் தலைக்குத்
தடவி ஒருமணி நேரம்
கழித்து கழுவி வந்தால் முடி நன்றாக
வளரும்.
*செம்வரத்தம் இலையை அரைத்து தலையில்
தடவி அரைமணி நேரம் ஊறிய பின்
தலையை சீயக்காய்
அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல்
அடர்த்தியாக வளரும்.
*கறிவேப்பிலை, சின்ன வெங்காயம்-4,
இரண்டையும் நன்றாக அரைத்து அத்துடன்
தயிர்
சேர்த்து தலைக்கு தேய்த்து முழுகினால்
கூந்தல் நல்ல கருமையான நிறத்துடன்
வளரும்.
*கடுக்காய், செவ்வரத்தம் பூ, நெல்லிக்காய்
ஆகியவைகளை சம அளவு எடுத்து தேங்காய்
எண்ணெயில் காச்சி கூந்தலில் தடவினால்
முடி நன்றாக வளரும்.
*வெந்தயத்தை ஊறவைத்து நன்கு அரைத்து தலையில்
பேக் போல போட்டு ஊறிய
பிறகு தலைக்கு குளித்தால்
தலை முடி செழித்து வளரும்.
*ஒரு லிட்டர் நல்லெண்ணெய் அல்லது தேங்காய்
எண்ணெயில் நெல்லிக்காய் பொடி,
தான்றிக்காய் பொடி, மருதாணி பொடி,
கறிவேப்பிலை பொடி,
கரிசலாங்கண்ணி பொடி, வெட்டிவேர்,
ரோஜா இதழ்கள், சந்தன
பொடி ஆகியவை தலா 10 கிராம் சேர்த்து,
எண்ணெயில் போட்டு கொதிக்க வைக்கவும்.
இந்த கலவையை நாலு நாள் வெயிலில் வைக்க
வேண்டும். சூரிய கதிர்கள்
பட்டு எண்ணெயில் எசன்ஸ் இறங்கும். பின்
வெள்ளைத் துணியில், அதை வடிகட்டவும்.
குளிக்கும் முன் இதை தலையில்,
தேய்த்து வந்தால், முடி கருமையாகும்,
அத்துடன் தலை முடி அடர்த்தியாக
வளரும்.
*மருதாணி, செம்பருத்தி, கருவேப்பிலை,
வேப்பிலை, ரோஜா இதழ்கள்
இவற்றை நன்கு நிழலில்
உலர்த்தி பொடி செய்து வைத்து கொண்டு காய்ச்சிய
தேங்காய் எண்ணையில்
கலந்து ஊறவிட்டு பின்பு தலைக்கு தேய்க்கவும்.
இப்படி செய்தால்
தலைமுடி உதிர்வது குறையும்.எப்பொழுதுமே ஒரு செய்முறை செய்தால்
அதை தொடர்ந்து செய்யவேண்டும். மாற்றிக்
கொண்டே இருந்தால் முடி உதிர்வதை தடுக்க
முடியாது.
*ஷாம்புக்கள் பயன்படுத்தும் போதும்
இதே போல் செய்ய
வேண்டும்.அடிக்கடி ஷாம்புக்களை மாற்றினால்
முடி உதிரும்.
செம்பருத்தி இலையை அரைத்து தலையில்
தடவி அரைமணி ஊறிய பின்
தலையை சீயக்காய்
அல்லது ஷாம்பூ போட்டு அலசவும். கூந்தல்
அடர்த்தியாக வளரும்....!

Sunday, 15 June 2014

அறியப்படாத GOOGLE இன் சில சேவைகள் !!

அறியப்படாத GOOGLE இன் சில
சேவைகள் !!

1. என்கிரிப்டட்
சர்ச் (Encrypted Search):
தேவையானவற்றைத்
தேடுவதற்கு இது ஒரு வேகமான
தேடுதளம். இந்தத் தளத்தின்
முகவரி encrypted.google.com.வங்கிகள்
பயன்படுத்தும் Secure Socket Layers
(SSL) பாதுகாப்பான கட்டமைப்பினை இந்த
தளம் பயன்படுத்துகிறது. 2010 மே மாதம்
முதல் இந்த
சேவை வாடிக்கையாளர்களுக்குத்
தரப்பட்டு வருகிறது.
2. கூகுள் திங்க் (Google Think)
கூகுள் நிறுவனத்திடம் இருந்து, தங்கள்
வர்த்தக செயல்பாடுகளுக்கான
ஆலோசனையை இந்த சேவை மூலம் அனைவரும்,
குறிப்பாக விளம்பர பிரிவு மற்றும்
அதனைப் போல சேவைத் தளங்களில்
இயங்குபவர்கள், பெற்றுக் கொள்ளலாம்.
இங்கு கிடைக்கும் பல ஆய்வுகள்,
ஆய்வு முடிவுகள், நேர்காணல்கள்
ஆகியவை பலரது வாழ்வில் புதிய
திருப்பத்தினைத் தந்ததாகப் பலரும்
கூறி உள்ளனர்.
3. கூகுள் மாடரேட்டர் (Google
Moderator):
பலவகைத் தலைப்புகள்
குறித்து இங்கு இலவசமாகக்
கலந்து ஆலோசிக்கலாம்.
கருத்துக்களை வரவேற்று, எந்த
ஒரு வாடிக்கையாளரும், புதிய
இழை ஒன்றை உருவாக்கலாம். கேள்விகளைக்
கூடப் பதியலாம். இந்த தளத்திற்கு வரும்
எவரும்
இது குறித்து கருத்து தெரிவிக்கலாம்.
குறிப்பிட்ட
கருத்தை வரவேற்று அதற்கு வாக்களிக்கும்
வசதி கூட இதில் உள்ளது. முதல்
கேள்விகள், நீல நிறப் பின்னணியில் மையக்
கேள்வியாகக் காட்டப்படும். மற்றவர்கள்
இது குறித்து தகவல் தெரிவிக்கலாம்.
ஒரு கருத்துரு அல்லது தலைப்பின் கீழ்
துணைப் பிரிவுகளையும் உருவாக்கலாம்.
4. கூகுள் சவுண்ட் சர்ச் (Google Sound
search): இது ஒரு விட்ஜெட் எனப்படும்
அப்ளிகேஷன். நம்மைச் சுற்றி இசைக்கப்படும்
இசை மற்றும் பாடல்களை அறிந்து அடையாளம்
கொள்ள இது உதவி புரிகிறது. கூகுள்
பிளே ஸ்டோரிலிருந்து, அடையாளம்
காணப்பட்ட பாடல்களை விலைக்கு வாங்க
முடியும். அடையாளம் காணப்படும்
பாடல்களின் பட்டியலை உருவாக்கி வைத்து,
பின்னொரு நாளில் கேட்கலாம் மற்றும்
வாங்கலாம்.
5 . கூகுள் ஸ்கீமர் (Google Schemer):
தாங்கள் மேற்கொள்ள வேண்டிய வேலைகளைப்
பகிர்ந்து கொண்டு,
அவற்றை மேற்கொள்வதற்கான வழிகளைத்
தெரிந்து கொள்ள இந்த தளம் உதவுகிறது.
மேற்கொள்ளப்பட இருக்கும் வேலைகள்
எது வேண்டுமானதாகவும் இருக்கலாம். ஓர்
அருங்காட்சியகம் செல்லுதல், நண்பர்களுடன்
கூட்டாகக் கலந்துரையாடல், வார
இறுதிக்கான சுற்றுலா செல்ல இடம்
தேர்ந்தெடுத்தல் என எதுவாக
வேண்டுமானாலும் இருக்கலாம்.
ஏற்கனவே இது போல
கலந்துரையாடப்பட்டு வரையறை செய்யப்பட்ட
திட்டங்களும் இதில் கிடைக்கும்.
6. பவர் சர்ச்சிங் வித் கூகுள் (Power
searching with Google):
தேடுதல் தளம் தான், கூகுள் நிறுவனத்தின்
வலிமையே. அந்த வகையில்,
எப்படி சிறப்பாக நம் தேடுதலை அமைத்துக்
கொள்ளலாம் என்று, இந்த தளத்தில், கூகுள்
நமக்கு டிப்ஸ் தருகிறது.
இணையத்திலேயே பயிற்சியும்
தரப்படுகிறது. இதன் மூலம்
மேம்படுத்தப்பட்ட வழிகளை,
தேடுதலுக்கென நாம்
தெரிந்து கொள்கிறோம்.
7. பில்ட் வித் குரோம் (Build with
chrome):
ஆஸ்திரேலியா நாட்டு நிறுவனமான
லெகோவுடன் இணைந்து கூகுள் அமைத்த
தளமே பில்ட் வித் குரோம். இது ஒரு நவீன
இணைய தொழில் நுட்பமாகும்.
இங்கு பிரவுசர் வழியாக, முப்பரிமாணப்
படங்களைக் காணலாம். பயனாளர்களும்
தங்களின் முப்பரிமாண
உருவங்களை அமைக்கலாம். இதில்
செயலாற்றுவது மிகவும்
வேடிக்கை நிறைந்ததாக உள்ளது.
8. கூகுள் ஆர்ட் ப்ராஜக்ட் (Google Art
Project):
இது கூகுள் தரும் ஸ்ட்ரீட்
வியூ போன்றதாகும்.
மியூசியம்,கலை அரங்கங்கள்
ஆகியவற்றிற்கு, வாடிக்கையாளர்கள், இணைய
வெளியிலேயே சுற்றுலா மேற்கொள்ளலாம்.
கலைத் துறையில் முன்னணியில் ஈடுபடும்,
40 நாடுகளைச் சேர்ந்த 151
வல்லுநர்களுடன் இணைந்து இந்த
தளத்தினை கூகுள் அமைத்துள்ளது.
மியூசியம்
நிர்வாகிகளிடமிருந்து அளப்பரிய
தகவல்களும், கூகுள் நிறுவனத்தின் நவீன
தொழில் நுட்பமும் இந்த தளத்தில்
இணைந்து வாடிக்கையாலர்களுக்கு நல்லதொரு
அனுபவத்தினைத் தருகின்றன.
9. கூகுள் ஸ்காலர் (Google Scholar):
இலக்கியம், ஆய்வு கட்டுரைகள், கல்வித்
துறை சார்ந்த பதிப்புகள், இணைய
வெளி தகவல் சேமிப்புகள், ஆய்வுச்
சுருக்கங்கள் மற்றும் நீதிமன்றம்
வெளியிடும் கருத்துகள்
ஆகியவை குறித்து உரையாட
இது ஒரு நல்ல தளம். மிகப் பெரியதாக
விரிந்து இருந்தாலும்,
இதனை அணுகுபவர்கள், தங்களுக்குத்
தேவையானதை மிக எளிதாகப்
பெற்று இயங்கலாம்.
10. கூகுள் மார்ஸ் (Google Mars):
அரிசோனா பல்கலையில் உள்ள, நாசா விண்
வெளி ஆய்வு விஞ்ஞானிகளுடன் கூட்டாக
இணைந்து, சிகப்பு கிரகமான மார்ஸ்
குறித்த மேப் ஒன்றை கூகுள்
தயாரித்துள்ளது. இது ஏறத்தாழ கூகுள்
எர்த் போன்றதாகும். அதன் மூலம் நாம்
எப்படி பூமியின்
அனைத்து பாகங்களுக்கும் சென்று வர
முடிகிறதோ, அதே போல மார்ஸ்
கிரகத்திற்கு, கூகுள் இதில்
பாதை அமைத்துத் தருகிறது. மார்ஸ்
எப்படி தோற்றமளிக்கும் என்பதனை நாம்
கண்டு கொள்ள அருமையான தளம் இது.